சத்தீஸ்கர் அரசியலில் புதிய புயலான ‘மகாதேவ்’ விவகாரம் – தேர்தலில் பாஜக-வுக்கு சாதகமா?!

டெல்லி மதுபானக் கொள்கை முறைகேடு குற்றச்சாட்டு தொடர்பான வழக்கில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த டெல்லி முன்னாள் முதல்வர் மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் சிறையில் இருக்கும் நிலையில், இந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை குறிவைத்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவால்

அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனைப் பொருட்படுத்தாமல் தேர்தல் பிரசாத்துக்குச் சென்றார் கெஜ்ரிவால். இதனால், அடுத்து என்ன மாதிரியான நடவடிக்கையை அமலாக்கத்துறை எடுக்கப்போகிறது என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

அரவிந்த் கெஜ்ரிவாலைத் தொடர்ந்து சத்தீஸ்கர் மாநிலத்தின் முதல்வர் பூபேஷ் பாகல் அமலாக்கத்துறையால் குறிவைக்கப்பட்டிருக்கிறார். சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் சூடுபிடித்திருந்த நிலையில், ‘மகாதேவ் சூதாட்ட செயலி உரிமையாளரிடமிருந்து முதல்வர் பூபேஷ் பாகலுக்கு ரூ.508 கோடி கைமாறியதாக அமலாக்கத்துறை தெரிவித்த குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பூபேஷ் பாகல்

சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெறுகின்றன. முதற்கட்ட வாக்கு பதிவு நாளை (நவ. 7) நடைபெறவிருக்கிறது. இந்த நிலையில், முதல்வர் பூபேஷ் பாகலுக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றச்சாட்டியிருக்கிறது. ராய்பூரில் ரூ.5 கோடிக்கும் அதிகமான ரொக்கப்பணத்துடன் கைதான இடைத்தரகரிடம் நடத்தப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து, இந்தக் குற்றச்சாட்டை அமலாக்கத்துறை தெரிவித்திருக்கிறது.

சத்தீஸ்கர் உள்ளிட்ட வடமாநிலங்களில் ‘மகாதேவ்’ சூதாட்ட செயலி மிகவும் பிரபலம். இந்த நிறுவனத்திடம் சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலுக்காக ரூ.508 கோடியை முதல்வர் பூபேஷ் பாகல் பெற்றிருக்கிறார் என்று பா.ஜ.க குற்றம்சாட்டுகிறது. முதல்வருக்கு எதிராக எழுப்பப்பட்டிருக்கும் இந்தக் குற்றச்சாட்டு, சத்தீஸ்கரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மத்திய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், ‘இந்த சட்டவிரோத செயலி, இணையதளத்தை நீண்ட காலத்துக்கு முன்பாகவே சத்தீஸ்கர் அரசு முடக்கியிருக்கலாம். அதற்கான அனைத்து அதிகாரமும் அந்த அரசுக்கு இருக்கிறது. ஆனால், சத்தீஸ்கர் அரசு அதைச் செய்யவில்லை’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

ஸ்மிருதி இரானி

மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, ‘சத்தீஸ்கர் சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள மகாதேவ் சூதாட்ட செயலி நிறுவனத்திடம் இருந்து ரூ.508 கோடியை ஹவாலா பணமாக பூபேஷ் பாகல் பெற்றிருக்கிறார். இந்தியாவின் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன் இதுபோன்ற ஒரு மோசடி நடந்ததில்லை. அதிகாரத்தில் இருந்துகொண்டு இத்தகைய குற்றத்தில் சத்தீஸ்கர் முதல்வர் ஈடுபட்டிருக்கிறார்’ என்று குற்றம்சாட்டியிருக்கிறார்.

அமலாக்கத்துறையின் வேண்டுகோளை ஏற்று, ‘மகாதேவ் புக் ஆன்லைன்’ உட்பட 22 சட்டவிரோத சூதாட்ட தளங்களுக்குத் தடை விதித்திருப்பதாக மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்திருக்கிறது.

இந்த நிலையில், சத்தீஸ்கரில் பீம் சிங் யாதவ் என்ற போலீஸ்காரரும் அசிம்தாஸ் என்ற மற்றொரு நபரும் பணமோசடி தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டிருக்கிறார்கள்.

பூபேஷ் பாகல்

வாக்குப்பதிவு தொடங்குவதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு சத்தீஸ்கரில் எதிர்க்கட்சியாக இருக்கும் பா.ஜ.க., வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில், மகாதேவ் செயலி வழக்கு தொடர்பாக பல புதிய குற்றச்சாட்டுகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும், ‘சூதாட்டத்தின் மூலமாக சத்தீஸ்கர் மக்களை மாநில அரசு சூறையாடியிருக்கிறது. இந்த அரசை டிசம்பர் 3-ம் தேதி தூக்கியெறியப்போகிறார்கள். எனவே, ஆட்சியில் நீடிப்பதற்கான தார்மீக உரிமையை இழந்த பூபேஷ் பாகல் உடனடியாக பதவி விலக வேண்டும்’ என்று பா.ஜ.க-வினர் கூறிவருகிறார்கள்.

மகாதேவ் சூதாட்ட தளம் தொடர்பான வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு திரைப்பட நடிகைகள் ஹூமா குரேஷி, ஹீனா கான், நகைச்சுவை நடிகர் கபில் சர்மா ஆகியோருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருக்கிறது. ஏற்கெனவே, பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூருக்கும் அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், முதல்வர் பூபேஷ் பாகல் மீதான குற்றச்சாட்டுதான் அரசியல் வட்டாரத்தில் மிகவும் சீரியஸான ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.

ஜெய்ராம் ரமேஷ்

சத்தீஸ்கர் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும் என்று கருத்துக்கணிப்புகள் வந்திருக்கின்றன. இந்த நிலையில், பூபேஷ் பாகலுக்கு எதிராக இந்தப் பிரச்னையை பா.ஜ.க பயன்படுத்திவருகிறது. இதனால், தேர்தலில் காங்கிரஸுக்கு பாதிப்பு எதுவும் வராது என்கிறார்கள் காங்கிரஸ் கட்சியினர். இந்தக் குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி திட்டவட்டமாக மறுத்திருக்கிறது.

இந்த விவகாரம் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஜெய்ராம் ரமேஷ், கே.சி.வேணுகோபால், அபிஷேக் சிங்வி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, ‘இது, முதல்வர் பூபேஷ் பாகலின் புகழைக் கெடுப்பதற்கான ஒரு சதிச் செயல். இதற்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்’ என்று அவர்கள் கூறியுள்ளனர். சூதாட்ட நிறுவனத்திடம் லஞ்சம் பெற்றதாக சொல்லப்படும் விவகாரம் மக்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியதா இல்லையா என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவரும்.!

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/46c3KEk

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/46c3KEk

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.