”பணயக்கைதிகள் விடுவிக்கப்படும்வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது” – இஸ்ரேல் திட்டவட்டம்

டெல் அவில்: ஹமாஸ் – இஸ்ரேல் போர் நாளுக்கு நாள் உக்கிரமடைந்துவரும் நிலையில், பணயக்கைதிகளை விடுவிக்கப்படும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உறுதிபட தெரிவித்துள்ளார்.

ஹமாஸ் – இஸ்ரேல் மோதலில் இதுவரை 10,300க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களில் 4000-க்கும் மேற்பட்டோர் குழந்தைகள். இஸ்ரேலில் 1,400 பேர் பலியாகியுள்ளனர். 242 பேர் ஹமாஸ் படையினரால் பிணைக் கைதிகளாகப் பிடித்துச் செல்லப்பட்டனர். ஆனால் இன்னும் போருக்கு சுமூக தீர்வு எட்டப்படவில்லை. உலக தலைவர்கள் போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றனர். ஆனால் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இதனை மறுத்து வருகிறார்.

அமெரிக்கா, ஹமாஸுக்கு எதிரான போரில் இஸ்ரேலுக்கு முழு ஆதரவு அளித்துள்ளது. அதே சமயம் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், “ஹமாஸை அழிப்பது அவசியம். ஆனால் அதற்காக ஹமாஸ் பிடியில் உள்ள காசாவை முழுவீச்சில் இஸ்ரேல் ஆக்கிரமிக்க நினைப்பது தவறு. மனிதாபிமான போர் நிறுத்தம் தேவை” என்று கூறிவருகிறார்.

இந்த நிலையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, பணயக்கைதிகளை ஹமாஸ் விடுவிக்கும் வரை காசாவிற்கு எரிபொருள் வழங்கப்பட மாட்டாது, ஹமாஸுடனான போரையும் நிறுத்த முடியாது என்று உறுதிபட தெரிவித்துள்ளார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் பாலஸ்தீன மக்களுக்கு மனிதாபிமான உதவிகளை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.