திரையுலகில் 60 ஆண்டுகளை நிறைவு செய்த கேஆர் விஜயா

தமிழ் சினிமாவில் சிலர் மட்டும்தான் நீண்ட நெடிய பயணத்தை மேற்கொண்டிருக்கிறார்கள். அவர்கள் விதவிதமான கதாபாத்திரங்கள், படங்கள், நடிகர்கள், மொழிகள் என நடித்து ஒரு பெரும் சாதனையைப் புரிந்தவர்களாகிறார்கள். அப்படிப்பட்ட ஒருவர் தான் கேஆர் விஜயா.

ஆந்திராவைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பமாக இருந்தாலும் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் பிறந்தவர் கேஆர் விஜயா. கேரளாவிலிருந்து தமிழகத்தின் பழனிக்கு அவரது குடும்பம் வந்தபோது நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். பின் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். 1963ம் ஆண்டு நவம்பர் 15ம் தேதி வெளிவந்த 'கற்பகம்' படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். முதல் படமே அவருக்கு வெற்றிப் படமாக அமைந்தது.

தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் நடித்தார். அவரும் சிவாஜி கணேசனும் சேர்ந்து நடித்த பல படங்கள் பெண்களைக் கவர்ந்து பெரும் வெற்றிப் படங்களாக அமைந்தன. 80களில் அம்மன் வேடத்தில் பல படங்களில் நடித்து பெண்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தார்.

திரைப்படங்களில் மட்டுமல்லாது டிவி தொடர்களிலும் நடித்துள்ளார். தற்போதும் படங்களில் நடித்து வருகிறார். புன்னகை அரசி என்ற பட்டத்துடன் அழைக்கப்பட்ட கேஆர் விஜயா சுமார் 500 படங்கள் வரை நடித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.