2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் குறித்து ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை சபாநாயகரிடம் கையளிப்பு

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்கு சபாநாயகரினால் நியமிக்கப்பட்ட பாராளுமன்றக் குழுவின் அறிக்கை அதன் தலைவர் பிரதி சபாநாயகர் கௌரவ அஜித் ராஜபக்ஷவினால் நேற்று (14) சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.

2023 ஒக்டோபர் 20ஆம் திகதி பாராளுமன்ற வளாகத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ டயானா கமகே, கௌரவ ரோஹன பண்டார, கௌரவ சுஜித் சஞ்சய் பெரேரா ஆகியோருக்கிடையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் சம்பவம் குறித்து இரு தரப்பிலிருந்தும் முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகள் தொடர்பில் விரைவாக விசாரணைகளை நடத்தி அதனைப் பாராளுமன்றத்தில் அறிக்கையிடுவதற்காகப் பிரதி சபாநாயகர் தலைமையில் குழுவொன்றை சபாநாயகர் நியமித்திருந்தார்.

இதற்கமைய இந்தக் குழுவின் உறுப்பினர்களாகப் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ சமல் ராஜபக்ஷ, கௌரவ (டாக்டர்) ரமேஷ் பத்திரன, கெளரவ கயந்த கருணாதிலக மற்றும் கௌரவ இம்தியாஸ் பாக்கீர் மாக்கர், கௌரவ தலதா அத்துகோரள மற்றும் இராஜாங்க அமைச்சர் கௌரவ (வைத்தியகலாநிதி) சீதா அரம்போபொல ஆகியோர் நியமிக்கப்பட்டிருந்தனர்.

இந்தக் குழு நான்கு தடவைகள் கூடியிருந்ததுடன், சம்பவத்துடன் தொடர்புடைய மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிகமாக இராஜாங்க அமைச்சர் கௌரவ பியல் நிஷாந்தவும் சாட்சியங்களைப் பெறுவதற்கு குழுவுக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

அறிக்கை கையளிக்கும் நிகழ்வில் பாராளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும், பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்னவும் கலந்துகொண்டிருந்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.