ஏழு கடல் தாண்டி : தமிழில் வெளியாகும் கன்னட படம்

முன்னணி கன்னட நடிகர் ரக்ஷித் ஷெட்டி. அவனே ஸ்ரீமன் நாராயணா, சார்லி 777 படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். இந்த படங்கள் தமிழில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. இவர் நடித்த கன்னட படமான 'சப்த சாகராட்ச்சே எலோ' என்ற படம் கடந்த செப்டம்பர் மாதம் வெளியாகி வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக தயாரான இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி உள்ளது.

பெரிய கோடீஸ்வரர் அவினாஷ் வீட்டில் கார் டிரைவராக வேலை பார்க்கிறார் ரக்ஷித் ஷெட்டி. அவினாஷ் மகன் கார் விபத்து ஏற்படுத்தி ஒருவரை கொன்று விட அந்த பழியை தான் ஏற்று சிறைக்கு செல்கிறார் ரக்ஷித். அவரை விடுதலை செய்து விடுவதாக ஏமாற்றி விடுகிறது அவினாஷ் குடும்பம். அவரது காதலி ருக்மணி வசந்தும் ஏமாற்றி விடுகிறார். 14 வருடங்களுக்கு பிறகு ரக்ஷித் சிறையிலிருந்து விடுதலையாவதோடு முதல் பாகம் முடிவடைந்தது.

தற்போது இதன் இரண்டாம் பாகம் நாளை வெளிவர இருக்கிறது. இந்த பாகத்தை தமிழிலும் வெளியிடுகிறார்கள். படத்திற்கு 'ஏழு கடல் தாண்டி' என்று டைட்டில் வைத்திருக்கிறார்கள். படத்தை ஸ்டோன் பெஞ்ச் பிலிம்ஸ் நிறுவனத்தின் கார்த்திகேயன் சந்தானத்துடன் இணைந்து, கல்யாண் சுப்பிரமணியன் தயாரித்திருக்கிறார். சக்திவேலனின் சக்தி பிலிம் பேக்டரி வெளியிடுகிறது.

படம் பற்றி ரக்ஷித் ஷெட்டி கூறும்போது “கன்னடத்தில் 'சப்தா சாகராச்சே எல்லோ -(சைட் ஏ)', 'சைட்- பி-' என 2 பாகங்களாக எடுத்தோம். முதல் பாகம் சில மாதங்களுக்கு முன் கன்னடத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இரண்டாம் பாகத்தைத் 'ஏழு கடல் தாண்டி' என்ற பெயரில் தமிழிலும் வெளியிடுகிறோம். முதல் பாகமும் தமிழில் வெளியாகி இருக்க வேண்டும். ஓடிடி தள ஒப்பந்தப்படி அந்தப் படத்தை சீக்கிரமே அவங்களுக்கு கொடுக்க வேண்டிய நிலை எற்பட்டது. அதனால மற்ற மொழிகளில் வெளியிட முடியவில்லை. ஓடிடியில் முதல் பாகத்தை தமிழில் பார்க்கலாம். அதை பார்த்து விட்டு இரண்டாம் பாகத்தை பார்த்தால் கூடுதல் சுவையாக இருக்கலாம். இரண்டாம் பாகத்தை மட்டும் தனி படமாகவும் ரசிக்கலாம். முதல் பாகத்தின் முன்னோட்டம் படத்தில் இருக்கிறது” என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.