மதுரை: தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு 10 சக்கர லாரிகளில் கனிமம் கொண்டு செல்ல அனுமதி வழங்கி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு உயர் நீதிமன்ற அமர்வு தடை விதித்துள்ளது.
கன்னியாகுமரியை சேர்ந்த பினோய், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு மற்றும் கேரளாவில் நடக்கும் அரசு மற்றும் தனியார் பணிகளுக்கு கிராவல், ஜல்லிகற்கள், எம்.சாண்ட், குவாரி தூசி மற்றும் மணல் சப்ளை செய்யும் ஒப்பந்தம் பெற்றுள்ளோம். நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இருந்து கேரளாவிற்கு கனிமங்கள் கொண்டு செல்கிறோம். தற்போது 10 சக்கரத்துக்கு மேல் உள்ள வாகனங்களில் கனிமங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, அரசின் தடையை ஏற்க மறுத்து, 10 சக்கரத்துக்கு மேற்பட்ட 700 லாரிகளில் தினமும் கனிமங்கள் கொண்டு செல்லலாம் என உத்தரவிட்டார். இதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசு தரப்பில் உயர் நீதிமன்ற கிளையில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதனை நீதிபதிகள் சுப்ரமணியம், லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
அரசுத் தரப்பில், தமிழகத்தில் இருந்து அதிகளவில் கனிமங்கள் கொண்டுச் செல்வதால் சுற்றுச்சூழல் மட்டுமின்றி சாலைகளும் பாதிக்கிறது. பொது நலன் கருதியே அரசு முடிவெடுத்தது. எனவே தனி நீதிபதியின் உத்தரவிற்கு தடை விதிக்க வேண்டும் எனக் கூறப்பட்டது. இதையடுத்து நீதிபதிகள், “தினமும் 700 லாரிகளில் களிமங்கள் கொண்டு செல்லலாம் என்ற தனி நதிபதியின் உத்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது. தனி நீதிபதியிடம் நிலுவையில் உள்ள பிரதான வழக்கின் விசாரணையை விரைந்து முடிக்க வேண்டும். மேல்முறையீடு தொடர்பாக வழக்கு தொடர்ந்தவர்கள் தரப்பில் பதிலளிக்க வேண்டும்” என்று கூறி விசாரணையை 2 வாரம் ஒத்திவைத்தனர்.