செந்தில் பாலாஜியின் உடல்நிலை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல்

புதுடெல்லி,

சட்டவிரோத பண பரிவர்த்தனை தடைச்சட்ட வழக்கில் கடந்த ஜூன் மாதம் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. சிறையில் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்ற நிலையில், தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. இந்த மனுவை ஐகோர்ட்டு கடந்த மாதம் 19-ந் தேதி தள்ளுபடி செய்தது. ஜாமீன் வழங்க மறுத்த ஐகோர்ட்டு உத்தரவுக்கு எதிராக செந்தில் பாலாஜி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.

கடந்த முறை விசாரணையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை டிசம்பர் 4ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது. மேலும் செந்தில் பாலாஜியின் மருத்துவ அறிக்கையை தாக்கல் செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உடல்நிலை தொடர்பாக ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் கடந்த 22ம் தேதி மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனை அறிக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் மூளைக்கான எம்.ஆர்.ஐ பரிசோதனையில் வலதுபுறத்தில் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அமைச்சர் செந்தில் பாலாஜியின் முதுகெலும்பில் வீக்கம் உள்ளதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது

அவருக்கு பித்தப்பை கற்கள் இருப்பதாகவும் நாளடைவில் உணவு உட்கொள்வதை அது குறைக்கும் என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இதயத்துக்கு செல்லும் ரத்த குழாயில் கால்சிய படிவு உள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.