ஐபிஎல் 2024 தொடருக்கான வீரர்கள் தக்கவைப்பு மற்றும் விடுவிப்பு தொடங்கியுள்ளது. நவம்பர் 26 ஆம் தேதிக்குள் பத்து ஐபிஎல் அணிகளும் தங்கள் அணியில் தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கும் வீரர்களின் பட்டியலையும் கொடுக்க வேண்டும். மேலும், அணிகள் தங்களுக்கு இடையேயும் வீரர்களை பரிமாற்றம் செய்து, அந்தப் பட்டியலையும் கொடுக்க வேண்டும். இதில் தான் இப்போது மிகப்பெரிய டிவிஸ்ட் ஏற்பட்டிருக்கிறது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கே திரும்பியிருக்கிறார். அவர் ஐபிஎல் அறிமுகமானதில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடினார். கடந்த முறை ரோகித் சர்மாவுக்கு பிறகு கேப்டன்சி பொறுப்பை தனக்கு கொடுக்குமாறு மும்பை இந்தியன்ஸ் நிர்வாகத்திடம் தெரிவித்தபோது, உடன்பாடு எட்டப்படாததால் அந்த அணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
அவரை குஜராத் டைட்டன்ஸ் அணி ஐபிஎல் தொடரில் அடியெடுத்து வைத்தபோது, தங்களின் கேப்டனாக நியமித்தது. அந்த தொடரிலேயே குஜராத் அணி சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியது. அவரை இப்போது குஜராத் டைட்டன்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விட்டுக்கொடுத்துள்ளது. அதிகாரப்பூர்வமாக 15 கோடி ரூபாய்க்கு பரிமாற்றம் செய்யப்பட்டதாக ஐபிஎல் நிர்வாகம் தரப்பில் தகவல் வெளியானாலும், திரைமறைவில் பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்து தான் மும்பை இந்தியன்ஸ் அணி, ஹர்திக் பாண்டியாவை வாங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
(@mufaddal_vohra) November 24, 2023
ஆனால் எவ்வளவு தொகை, இரு அணிகளுக்கு இடையே ஏற்பட்ட டீல் என்ன? என்பது மட்டும் இன்னும் தெளிவாக வெளியாகவில்லை. இருப்பினும் ஹர்திக் பாண்டியாவுக்காக மிகப்பெரிய தொகை மற்றும் டீல்களை மும்பை இந்தியன்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் செய்திருப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் மீண்டும் தன்னுடைய சொந்த வீடாக பார்க்கும் மும்பைக்கே திரும்புகிறார் ஹர்திக் பாண்டியா. அவர் அணிக்குள் வந்திருக்கும்பட்சத்தில் ரோகித் சர்மாவின் நிலை என்ன என்ற கேள்வி எழுந்துள்ளது. அவரை மும்பை இந்தியன்ஸ் அணி விடுவிக்க தயாராகிவிட்டதாக கூறப்படுகிறது.
பெரிய அளவிலான ஸ்கோர் ஏதும் ரோகித் சர்மாவிடம் இருந்து வரவில்லை என்பதால் அவரை ஓரம்கட்ட மும்பை இந்தியன்ஸ் அணி முடிவெடுத்திருக்கிறது. ஏற்கனவே இந்திய அணி 20 ஓவர் பார்மேட்டில் ரோகித் சர்மாவை ஓரம்கட்டிவிட்டது. இப்போது ஐபிஎல் தொடரிலும் ரோகித் சர்மாவின் நிலை கேள்விக்குறியாகியுள்ளது. ஒருவேளை ரோகித் சர்மா விடுவிக்கப்பட்டால் அவர் குஜராத் அணிக்காக விளையாட வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.