16 வருடங்களாகத் தொடரும் 'பருத்தி வீரன்' பஞ்சாயத்து

அமீர் இயக்கத்தில், யுவன் ஷங்கர் ராஜா இசையமைப்பில், கார்த்தி, பிரியாமணி, சரவணன், பொன்வண்ணன் மற்றும் பலர் நடித்து 2007ம் ஆண்டு வெளிவந்த படம் 'பருத்தி வீரன்'.

விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரிய வெற்றியைப் பெற்ற படம். சிறந்த நடிகைக்கான தேசிய விருது பிரியாமணிக்கும், சிறந்த எடிட்டருக்கான தேசிய விருது ராஜாமுகம்மதுவுக்கும் இப்படம் மூலம் கிடைத்தது.

'பருத்தி வீரன்' படத்தில் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி நடித்து சமீபத்தில் வெளிவந்த 'ஜப்பான்' படம் அவரது 25வது படமாக அமைந்தது. அதற்காக 'கார்த்தி 25' என்ற விழாவை சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தினார்கள். அந்த விழாவுக்கு அமீரை அழைத்ததாக கார்த்தி தரப்பில் சொல்லப்பட்டது. ஆனால், தன்னை கார்த்தி நேரடியாக அழைக்கவில்லை, யாரோ ஒருவரை வைத்து அழைத்தார்கள், அதனால் கலந்து கொள்ளவில்லை என்றார் அமீர்.

இதற்கடுத்து 'பருத்தி வீரன்' படத்தின் தயாரிப்பாளர் ஸ்டுடியோ கிரீன் ஞானவேல் ராஜா யு டியூப் தளம் ஒன்றிற்கு அளித்த பேட்டியில் அமீரைப் பற்றி கடுமையாகப் பேசியிருந்தார். 'பருத்தி வீரன்' படத்தின் முதல் பிரதி 2 கோடியே 75 லட்சம், ஆனால், படத்தின் முடிவில் செட்டில் பண்ணிய தொகை 4 கோடியே 85 லட்சம்,” என அப்படத்திற்காக செலவான தொகையைப் பற்றி கூறியிருந்தார். கூடுதலான அந்தத் தொகை 2 கோடியே 10 லட்சம் தான் தற்போது வரையில் நீடித்து வரும் பஞ்சாயத்து.

தயாரிப்பாளர் ஞானவேல் அளித்த பேட்டி சமூக வலைத்தளங்களிலும், செய்திகளாகவும் ஊடகங்களில் பரவியது. சில நாட்களுக்குப் பிறகு இயக்குனரும், நடிகருமான சசிகுமார், அப்படத்தில் அப்போது இணை இயக்குனராகப் பணியாற்றிய சமுத்திரக்கனி, படத்தில் பிரியாமணி அப்பாவாக நடித்த பொன்வண்ணன் ஆகியோர் அமீருக்கு ஆதரவாகவும் ஞானவேலை ஏறக்குறைய எச்சரித்தும் அடுத்தடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இதனிடையே, இந்த விவகாரம் குறித்து இயக்குனர் அமீர் சில தினங்களுக்கு முன்பு வெளியிட்ட அறிக்கையில் உள்ள சில வரிகள் இந்த விவகாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் ஆசையோடு குறிப்பிடப்பட்டிருந்தன.

“இது போல் யாரையும் அவதூறாக பொதுவெளியில் பேச வேண்டாம்,” என அவரை வழி நடத்தும் பெரியவர்கள் அவருக்கு அறிவுறுத்த வேண்டும் என்றும், “பருத்தி வீரன்' படப்பிரச்சனை மீண்டும் மீண்டும் யு டியூப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் தொடராமல் இருக்க வேண்டும் என்பதே என் ஆசை,” என்றும் அமீர் அறிக்கையில் இருந்த முக்கிய வரிகள்.

ஆனால், அடுத்தடுத்து ஏதோ ஒரு சர்ச்சை தொடர்ந்து வந்து கொண்டு இந்த 'பருத்தி வீரன்' விவகாரத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.