உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் மீட்பு: பாராட்டு தெரிவித்த மத்திய மந்திரி

புதுடெல்லி,

நவம்பர் 12 ஆம் தேதி முதல் உத்தரகாண்டில் சுரங்கப்பாதையின் ஒரு பகுதியில் தொழிலாளிகள் சிக்கிக் கொண்டனர். அந்த சுரங்கப்பாதையில் 60 மீட்டருக்கும் அதிகமான உடைந்த பாறைகள், கான்கிரீட் மற்றும் முறுக்கப்பட்ட உலோகம் இருந்ததால் அவர்கள் வெளியேற முடியாம தடுத்ததால், அதில் 41 தொழிலாளர்கள் சிக்கிக்கொண்டனர்.

இந்நிலையில் 17 நாட்கள் போராட்டத்துக்குப் பிறகு உத்தரகாசி சுரங்கத்தில் சிக்கிய 41 தொழிலாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். சுரங்க விபத்தில் சிக்கி இருந்த தொழிலாளர்களை தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் ஒருவர் பின் ஒருவராக மீட்டனர். சுரங்கத்தில் இருந்து மீட்கப்பட்ட தொழிலாளர்களை உத்தரகண்ட் முதல் மந்திரி புஷ்கர் சிங் தாமி, மத்திய மந்திரி வி.கே.சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அங்கு தயார் நிலையில் இருந்த மருத்துவக்குழுவினர் உடனடியாக சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து அவர்கள் அனைவரும் ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். சுரங்கத்தில் இருந்து தொழிலாளர்கள் மீட்கப்பட்டதை அறிந்ததும் அவர்களது உறவினர்கள் கைத்தட்டியும், பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். பல்வேறு சவால்களை கடந்து தொழிலாளர்களை வெற்றிகரமாக மீட்டுள்ள மீட்புக்குழுவினருக்கு நாடு முழுவதும் பாராட்டுகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில் சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என்று மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில், “எங்களின் சொந்தத்தைப் பாதுகாக்க எந்தக் கல்லையும் விடமாட்டோம். சுரங்கப்பாதையில் சிக்கியவர்களை மீட்க அயராது உழைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். நம்பிக்கையைக் கைவிடாமல் இத்தகைய துன்பங்களைச் சந்தித்தவர்களின் மன உறுதியையும் மன உறுதியையும் பாராட்டுங்கள்” என்று அதில் ஜெய்சங்கர் பதிவிட்டுள்ளார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.