
‛என் ஓமனா ஜோதிகா' : நெகிழ்ந்த சூர்யா
நடிகர் சூர்யாவின் மனைவி ஜோதிகா திருமணத்துக்கு பின்னர் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை தொடர்ந்து தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்தவகையில் இப்போது மலையாளத்தில் ஜியோ பேபி இயக்கத்தில் மம்முட்டிக்கு ஜோடியாக இவர் நடித்த திரைப்படம் காதல் தி கோர்.
கடந்த வாரம் இத்திரைப்படம் திரைக்கு வந்தது. இப்படத்திற்கு பாராட்டுக்கள் மற்றும் நல்ல விமர்சனங்கள் குவிந்த வண்ணம் உள்ளது. சினிமா பிரபலங்களும் காதல் தி கோர் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். நேற்று நடிகை சமந்தா, இது இந்த ஆண்டின் சிறந்த படமாக இருக்கிறது என பாராட்டி இருந்தார். இந்த நிலையில், நடிகர் சூர்யாவும் தற்போது காதல் தி கோர் படத்தை பாராட்டி பதிவிட்டுள்ளார்.
இன்ஸ்டாகிராமில் அவர் கூறியதாவது, ‛‛அழகான மனம் கொண்டவர்கள் ஒன்றிணைந்தால் தான், காதல் தி கோர் போன்ற திரைப்படங்கள் கிடைக்கும். மம்முட்டியின் நல்ல சினிமா மீதான காதலுக்கும் உத்வேகத்துக்கும், இப்படி ஒரு அருமையான படத்தை கொடுத்த படக்குழுவுக்கும் தலைவணங்குகிறேன். ஜியோ பேபியின் இயக்கத்தில் அமைதியான காட்சிகள் கூட பெரிய அளவில் பேசின. எழுத்தாளர்கள் ஆதர்ஷ் சுகுமாறன் மற்றும் பால்சன் ஆகியோர் இந்த உலகத்தை நமக்கு காட்டியதற்காக நன்றி! மேலும் காதல் என்னவாக இருக்கும் என்பதைக் காட்டி அனைத்து இதயங்களையும் வென்றதற்காக என் ஓமனா ஜோதிகாவுக்கு வாழ்த்துக்கள்” என நெகிழ்ச்சி உடன் பதிவிட்டுள்ளார் சூர்யா.