2024ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை நடைபெறுகிறது. இந்த உலக கோப்பையில் விளையாடும் இந்திய அணியில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா ஆகியோருக்கு இடம் கிடைக்குமா? என்பதே கேள்விக்குறியாகியுள்ளது. பிசிசிஐ பொறுத்தவரை ஹர்திக் பாண்டியா தலைமையில் இளம் படையை களமிறக்க தான் திட்டமிட்டிருக்கிறது. ஒருவேளை பிளான் பி தேவைப்பட்டால் சூர்ய குமார் யாதவ் இந்திய அணியை 20 ஓவர் உலக கோப்பையில் வழிநடத்தவும் வாய்ப்பு இருக்கிறது. கடந்த 20 ஓவர் உலக கோப்பையை கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி தோற்றதில் இருந்தே சர்வதேச 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் விளையாடவில்லை.
பிசிசிஐ -யும் அவர்களுக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை. இந்த சூழலில் இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரரான பர்தீவ் படேல் முக்கியமான கருத்து ஒன்றை தெரிவித்திருக்கிறார். கிரிக்பஸ் தளத்தில் பேசும்போது, 20 ஓவர் உலக கோப்பைக்கு ரோகித் சர்மா ஏன் கேப்டனாக இருக்க வேண்டும் என்றும், ஹர்திக் பாண்டியாவுக்கு பதிலாக அவர் அணியை வழிநடத்துவது எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் விரிவாக தெரிவித்துள்ளார்.
பார்திவ் படேல் இதுகுறித்து பேசும்போது, ” டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித் சர்மாதான் இந்தியாவை வழிநடத்த வேண்டும். ஒருநாள் உலகக் கோப்பைக்குப் பிறகு ஹர்திக் பாண்டியா இந்தியாவின் டி 20 கேப்டனாக இருப்பார் என்று அனைவரும் கருதினர். ஆனால் இப்போது அவரது காயத்தால் அவர் எப்போது திரும்புவார் என்று யாருக்கும் தெரியாது. இந்த ஆண்டு டெஸ்ட் தொடர், ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் டி20 ஆகியவை ஒரே நேரத்தில் நடக்கின்றன. அதனால்தான் எங்களுக்கு மற்ற கேப்டன்கள் மற்றும் பிற அணிகள் இருந்தன. அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபிக்கு நீங்கள் அணியில் இடம்பிடிக்க விரும்பினால், அதற்கேற்ப திட்டமிடலாம். ஆனால் டி20 உலகக் கோப்பைக்கு ரோஹித்தை கேப்டனாக்குவதுதான் பொருத்தமாக இருக்கும்.
கேப்டனாக ஹர்திக் பாண்டியா
2023 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை முடிந்த பிறகு, ஆஸ்திரேலியாவுடனான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக இருக்கிறார். இந்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற்ற டி20 போட்டியில் இந்திய அணிக்கு ஜஸ்பிரித் பும்ரா தலைமை தாங்கினார். ஹர்திக் பாண்டியா 11 டி20 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அடிக்கடி காயத்தில் அவர் சிக்குவதால் ஹர்திக் பாண்டியாவுக்கு வழங்கப்படும் கேப்டன் பொறுப்பு கேள்விக்குறியாகியுள்ளது.