வெளிநாடுகளில் வசிக்கும் ஹமாஸ் தலைவர்களை கொல்ல இஸ்ரேல் திட்டம்

புதுடெல்லி: பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாதிகளுக்கு எதிரான போர் முடிந்த பிறகு, இஸ்ரேல் முன்னாள் பிரதமர் கோல்டா மீரின் வழியைப் பின்பற்ற இப்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு விரும்புவதாகக் கூறப்படுகிறது. இதன்படி, இஸ்ரேல் எதிரிகள் (ஹமாஸ் தலைவர்கள்) எந்த நாட்டில், எந்த கண்டத்தில் இருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து கொலை செய்ய ‘ஆபரேஷன் ராத் ஆப் காட்’ போன்ற திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கவும் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

குறிப்பாக துருக்கி, லெபனான் மற்றும் கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைவர்களை ஒழிப்பதற்கான திட்டத்தை இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் வகுத்து வருவதாகக் கூறப்படுகிறது. ஆனால், இந்த திட்டம் மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்று மொசாட் அமைப்பின் முன்னாள் இயக்குநர் இப்ரெய்ம் ஹலெவி கவலை தெரிவித்துள்ளார்.

மொசாட் உளவு அமைப்பு தயாரித்துள்ள பட்டியலில், இஸ்மாயில் ஹனியே, முகம்மது டெய்பி, யாயா சின்வார் மற்றும் காலித் மஷால் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதில் இஸ்மாயில் ஹனியே (60)பாலஸ்தீன முன்னாள் பிரதமர் (2006)ஆவார். இவர் ஹமாஸ் பொலிட் பீரோதலைவராக 2017-ல் தேர்வானார். இப்போது தாமாக முன்வந்து வெளிநாடுகளில் (கத்தார், துருக்கி) வசிக்கிறார்.

முகம்மது டெய்ப் என்பவர் ஹமாஸ் ராணுவ பிரிவு தலைவர். இவர்தான் இஸ்ரேலின் முதல் எதிரி. இவரை கொலை செய்ய இஸ்ரேல் 6 முறை முயற்சி செய்துள்ளது. இவர் அமெரிக்காவின் சர்வதேச தீவிரவாதிகள் பட்டியலிலும் இடம்பெற்றுள்ளார். இவர் எங்கு இருக்கிறார் என்பது தெரியவில்லை.

யாயா சின்வார் (61) இஸ்டைன் அல்-காசம் பிரிகேட்ஸ் (ஹமாஸ் ராணுவம்) முன்னாள் கமாண்டர் ஆவார். இவர் 2017-ல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பின் தலைவராக தேர்வானார். 23 ஆண்டுகள் இஸ்ரேல் சிறையில் இருந்த இவர், கைதிகள் பரிமாற்ற திட்டத்தின் கிீழ் 2011-ல் வெளியில் வந்தார்.

காலித் மஷால் என்பவர் ஹமாஸ் அமைப்பின் பொலிட்பீரோ உறுப்பினர் ஆவார். இவர் இப்போது கத்தாரில் வசிப்பதாகக் கூறப்படுகிறது. கடந்த 1997-ல் ஜோர்டானில் இருந்த இவரை கொலை செய்ய மொசாட் முகவர்கள் கனடா சுற்றுலாப் பயணிகள் போர்வையில் முயற்சி செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.