சென்னை வெள்ளம் | மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இணைய மக்கள் இயக்கத்தினருக்கு விஜய் அழைப்பு

சென்னை: மிக்ஜாம் புயல் காரணமாக பதிவான மழையினால் சென்னை நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரால் சூழ்ந்துள்ளன. அதன் காரணமாக வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. நீரை வெளியேற்றுவது, அதனால் வெளியே வர முடியாமல் வீட்டிலேயே சிக்கி உள்ள மக்களை மீட்கும் பணியில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த சூழலில் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக இயங்க தனது மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்களுக்கு நடிகர் விஜய் அழைப்பு விடுத்துள்ளார்.

இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது. “சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ‘மிக்ஜாம்’ புயல் கனமழை காரணமாக குழந்தைகள் பெண்கள் முதியவர்கள் உட்பட பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி உள்ளனர். ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் மற்றும் உணவின்றியும் போதிய அடிப்படை வசதிகளின்றியும் தவித்து வருவதாக செய்திகள் வருகின்றன. வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதியில் இருந்து மீட்க உதவி கேட்டு இன்னமும் நிறைய குரல்கள் சமூக வலைத்தளங்கள் வழியாக வந்த வண்ணம் உள்ளன.

இவ்வேளையில் மக்கள் இயக்க நிர்வாகிகள் அனைவரும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அரசு முன்னெடுக்கும் மீட்பு பணிகளில் தன்னார்வலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டு இயன்ற உதவிகளை செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். கைகோர்ப்போம் துயர் துடைப்போம்” என அந்த பதிவில் விஜய் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.