“மக்களவையில் புகை கக்கிய கேன்… நான்தான் பறித்து வெளியே எறிந்தேன்!” – காங்கிரஸ் எம்.பி குர்ஜீத் சிங் அஜ்லா

புதுடெல்லி: மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம்தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீஇத் சிங் அஜ்லா.

மக்களவையில் இன்று (டிச.13) பூஜ்ஜிய நேர நிகழ்வுகள் நடந்து கொண்டிருந்தபோது பார்வையாளர்கள் அரங்கில் இருந்த இருவர் அத்துமீறி இருக்கைகளில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் கைகளில் புகை கக்கும் கருவி வைத்திருந்ததும், அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வெளியேறியதும் பதற்றத்தை ஏற்படுத்தியது. உடனடியாக, அந்த இருவரும் பிடிக்கப்பட்டு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். இந்நிலையில், மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருக்கை மீது குதித்த நபரிடம் இருந்து தாம் தான் புகை கக்கிய கேனைப் பறித்து வெளியே எறிந்ததாகக் கூறியுள்ளார் காங்கிரஸ் எம்.பி. குர்ஜீத் சிங் அஜ்லா. இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், ”திடீரென மக்களவைக்குள் பார்வையாளர்கள் அரங்கில் இருந்து இருவர் குதித்தனர். அதில் ஒருவர் கையில் கேன் இருந்தது. அதிலிருந்து மஞ்சள் நிறத்தில் புகை வந்தது. நான் அந்த நபரிடமிருந்து கேனைப் பறித்து தூக்கி வெளியே எறிந்தேன். இன்று நடந்தது மிகப் பெரிய பாதுகாப்பு மீறல்” என்றார்.

1 மணிக்கு நடந்த சம்பவம்: சரியாக 1 மணியளவில் பூஜ்ஜிய நேர நிகழ்வின்போது இந்தச் சம்பவம் நடந்தது. அவைக்குள் குதித்தவர்கள் ‘சர்வாதிகாரத்தை அனுமதிக்கமாட்டோம்’ என்று கோஷமிட்டுள்ளனர். இதேபோல் அவைக்கு வெளியே கைதான இரு பெண்களும் ’பாரத் மாதா கி ஜே’ என்று முழக்கமிட்டனர். அந்தப் பெண்களில் ஒருவர் தன் பெயர் நீலம் என்று தெரிவித்ததாகவும், மணிப்பூர் வன்முறையைக் கண்டித்து போராட்டம் நடத்தியதாக காவல் துறையிடம் கூறியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த டெல்லி காவல் ஆணையர், பாதுகாப்பு மீறல் எப்படி சாத்தியமானது என்பது தொடர்பாக விரிவான விசாரணையில் ஈடுபட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.