சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் தேரர்கள் குழுவினர் மற்றும் உலக தமிழர் பேரவை ஆகியன இணைந்து ஏற்படுத்தியுள்ள ‘இமயமலை பிரகடனம்’ சபாநாயகரிடம் கையளிப்பு
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பைச் சேர்ந்த தேரர் பிரதிநிதிகளும், உலகத் தமிழர் பேரவையின் பிரதிநிதிகளும் (12) பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவைச் சந்தித்தனர்.
அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் இந்தச் சந்தர்ப்பத்தில் கலந்துகொண்டிருந்தனர். சமாதானமான மற்றும் சுபீட்சமான இலங்கைக்கு அவசியமான 6 முக்கிய விடயங்கள் அடங்கிய “இமயமலைப் பிரகடனம்” இங்கு சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
அனைத்து சங்க அமைப்பையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்துவாழ் தமிழர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையில் 2023 ஏப்ரல் மாதம் நேபாளத்தில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் பின்னர் இந்தப் பிரகடனம் தயாரிக்கப்பட்டிருப்பதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
நேபாளத்தில் ஏப்ரல் 2023 இல் அனைத்து தரப்பினரையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மகா சங்கத்தினருக்கும் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த புலம்பெயர்ந்த தமிழ் உறுப்பினர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர் இந்த வெளியீடு தயாரிக்கப்பட்டது என்பதும் தெரியவந்தது. தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்தி அமைதியான தேசத்தைக் கட்டியெழுப்பக் காணப்படும் தடைகள் மற்றும் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது.
இங்கு கருத்துத் தெரிவித்த சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிடுகையில், தேசிய ஒருமைப்பாட்டினூடாக வளமான நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு திறந்த மனதுடன் இந்த முயற்சியில் கலந்துகொள்ளுமாறு சகல இலங்கையர்களுக்கும் அழைப்பு விடுப்பதாத் தெரிவித்தார். இந்தத் தேசிய செயற்பாட்டில் அர்ப்பணிப்புடன் ஈடுபட்டுள்ள அனைத்துத் தரப்பினருக்கும் அவர் நன்றி தெரிவித்தார்.
இங்கு உரையாற்றிய நீதி அமைச்சர் கௌரவ கலாநிதி விஜேதாச ராஜபக்ஷ தெரிவிக்கையில், மகாசங்கத்தினர், உலகத் தமிழர் பேரவை மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் இணைந்து நடத்திய இந்தச் சந்திப்பு தேசிய ஒருமைப்பாட்டிற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சந்தர்ப்பமாகும் என்றார். பல்வேறு நாடுகளில் உள்ள இலங்கையைச் சேர்ந்த தமிழ் சமூகத்தினரைப் புலம்பெயர்ந்த சமூகத்தினர் (டயஸ்போரா) என அழைப்பதைவிடுத்து எமது சொந்த சமூகத்தினராக அவர்களைக் கருத வேண்டும் என்றார். இவர்கள் அனைவரும் இந்த நாட்டில் வேரூன்றியவர்கள் எனவே அவர்களையும் இந்த நாட்டில் உள்ள ஏனைய இனங்கள் போன்று எமது உறவினர்களாக கருத வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பின் அமைப்பாளர் வணக்கத்துக்குரிய களுபஹன பியரதன தேரர், இமயமலை பிரகடனம் பற்றி இங்கு கருத்துத் தெரிவித்தார். இந்த ஒப்பந்தம் விவாதம் மற்றும் திருத்தங்களுக்கு உட்படுத்தப்படக் கூடியது என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்தத் திட்டம் குறித்து விளக்கமளிப்பதற்கு மகா சங்கத்தினரைச் சந்தித்ததாகவும், அவர்களின் ஆசீர்வாதம் இதற்குக் கிடைத்ததாகவும் இங்கு கருத்துத் தெரிவித்த உலகத் தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவப்படுத்தி சுரேன் சுரேந்திரன் குறிப்பிட்டார். 39 வருடங்களின் பின்னர் தான் யாழ்ப்பாணம் சென்று தமிழ், முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் மதகுருமார்களைச் சந்தித்ததாகவும், இந்த முயற்சி முன்னரே முன்னெடுக்கப்பட வேண்டியது என்பதை அவர்கள் ஏற்றுக் கொண்டதாகவும் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் குழுக்களிப் பிரதித் தவிசாளர் கௌரவ அங்கஜன் இராமநாதன், இராஜாங்க அமைச்சர்களான கௌரவ தாரக பாலசூரிய, கௌரவ அனுப பஸ்குவல், கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சிறந்த இலங்கைக்கான சங்க அமைப்பினைப் பிரதிநிதித்துவுப்படுத்தி அதன் அமைப்பாளர் வணக்கத்துக்குரிய மாதம்பாகம அஸ்ஸஜிதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட மகா சங்க தேரர்கள், உலகத் தமிழர் பேரவையைப் பிரதிநிதித்துவுப்படுத்தி ஐக்கிய இராச்சியம், கனடா, அவுஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தனர்.