டிச.16, 17-ம் தேதிகளில் 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

சென்னை: கன்னியாகுமரி, திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களில் வரும் 16, 17-ம் தேதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிழக்கு திசைக் காற்றில் நிலவும் வேகமாறுபாடு காரணமாக தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று லேசானது முதல் மிதமான மழையும், நாளை (டிச. 15) மின்னலுடன் கூடிய மழையும் பெய்யக்கூடும்.

கனமழை வாய்ப்புள்ள மாவட்டம்: வரும் 16, 17-ம் தேதிகளில் தமிழகத்தில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 86 டிகிரி பாரன்ஹீட் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 73.4 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும்.

மீனவர்களுக்கு எச்சரிக்கை: தமிழகத்தில் டிச.13-ம் தேதி (நேற்று) காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவுகளின்படி அதிகபட்சமாக கோவை மாவட்டம் வால்பாறையில் 3 செ.மீ., சின்கோனாவில் 2 செ.மீ., தூத்துக்குடி மாவட்டம் வைகுண்டம், நீலகிரி மாவட்டம் பார்வூட்டில் 1 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குமரிக் கடல் மற்றும் அதையொட்டிய மாலத்தீவு பகுதிகளில் வரும் 16-ம் தேதி வரை மணிக்கு 40 முதல் 45 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 55 கி.மீ. வேகத்திலும் சூறாவளிக் காற்று வீசக்கூடும். எனவே, இந்நாட்களில் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.