“பாதுகாப்புக்காகத்தான் இதை பகிரங்கப்படுத்தினோம்!" – இந்தியாமீதான குற்றச்சாட்டுக்கு கனடா விளக்கம்!

கனடாவைச் சேர்ந்த சீக்கியத் தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா – கனடா இடையே உறவுச்சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. கனடா குடியுரிமைப் பெற்றவரை இந்திய அரசின் உளவுப்பிரிவினர் கொலைசெய்திருக்கலாம் என்றும், இதற்குப் பின்னணியில் இந்திய அரசு இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, அந்த நாட்டின் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். கனடாவின் குற்றச்சாட்டை இந்திய அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. மேலும் அதற்கான ஆதாரங்களையும் கனடாவிடம் கேட்டிருக்கிறது.

கனடா தேசியக்கொடி

இதனால் நீடிக்கும் மோதல்போக்கால் இரு நாடுகளும் விசா வழங்குவதை நிறுத்திவைத்தன. இந்தியா மட்டும் தற்போது விசா வழங்கி வருகிறது. தங்கள் நாட்டு மக்களுக்கு உண்மையாக இருக்க விரும்புவதாகக் கூறும் கனடா பிரதமர், ஹர்தீப் சிங் கொலை விவகாரத்தில், இந்தியா ஒத்துழைக்க வேண்டும் என வலியுறுத்திவருகிறார்.

இந்த நிலையில், கனட செய்தி நிறுவனம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ஜஸ்டின் ட்ரூடோ, “கடந்த செப்டம்பர் 18-ம் தேதியன்று கனட குடியுரிமைப் பெற்ற இந்தியர் கொலைசெய்யப்பட்ட விவகாரம் குறித்து, நாடாளுமன்றத்தில் பேசியதற்கான காரணம் இருக்கிறது. நாடாளுமன்றத்தில் பேசுவதற்கு முன்புவரை இரு நாட்டு அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வந்தார்கள்.

கனடா பிரதமர்

ஆனால், கனடாவில் இருக்கும் பிற நாட்டவரின் உயிருக்கு ஆபத்து இருப்பது போன்ற பிம்பம் ஏற்பட்டது. அதனால், குடிமக்கள் பாதுகாப்பற்ற மனநிலையிலிருந்தார்கள். எனவே, இதைப் பகிரங்கப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஒருவேளை நான் பேசாவிட்டாலும் ஊடகங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகியிருக்கும். அது இன்னும் பதற்றத்தை அதிகரித்திருக்கும் என்பதால், பேசத் தொடங்கினேன். இந்த விவகாரம் குறித்துப் பேசத் தொடங்கும்போதே, இது கடினமான உரையாடலாக இருக்கும் என்று எங்களுக்குத் தெரியும்.

எங்கள் மக்களுக்கு அமைதியையும், நம்பிக்கையையும் அதிகரிக்கவும், கூடுதல் பாதுகாப்புக்காகவும்தான் இதைப் பகிரங்கமாகப் பேசினோம். இந்தக் கொலைக்குப் பின்னால் இந்திய அரசாங்கம் இருந்தது என்பதை அறிவோம் அல்லது நாங்கள் நம்புவதற்கு எங்களுக்கு நம்பகமான காரணங்கள் இருக்கின்றன.

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ

எனவே, இனி இது போன்ற சம்பவங்கள் தொடர்வதைத் தடுக்கும் வகையில், இது குறித்து பகிரங்கமாகப் பேசினோம். அமெரிக்கா ஏற்கெனவே ஒரு கொலையைப் பற்றி விசாரிக்கும்போதுதான், அமெரிக்காவில் சீக்கியர் ஒருவரைக் கொலைசெய்வதற்கான முயற்சி தடுக்கப்பட்டது. அதனால்தான் அமெரிக்கா ஆதாரத்தை உடனே வெளியிட்டது. ஆனால், நமது விசாரணை முறை வேறு. எனவே, நமது விசாரணைப் புள்ளிகள் ஒன்றிணையும்போது, ஆதாரத்தை வழங்குவோம்” எனத் தெரிவித்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.