மும்பை அணியில் இருந்து வெளியேறினாரா சச்சின்…? உண்மை என்ன?

Mumbai Indians: உலகக் கோப்பை (ICC World Cup 2023) இறுதிப்போட்டியில் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தொடர்ந்து 10 வெற்றிகளை குவித்து இறுதிப்போட்டியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று சாம்பியன் பட்டத்தை இழக்கிறது. அதாவது, நவ.19ஆம் தேதி அன்று. இந்தியாவே சோக கதியில் இருந்தது.  

தொடர்ந்து அடுத்த ஒரு வாரம் முழுவதும் ஐபிஎல் ஏலத்திற்கான Retention பேச்சுகள் விறுவிறுப்பாக இருந்தன. அந்த நேரத்தில் ஹர்திக் பாண்டியா (Hardik Pandya) மீண்டும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு திரும்புகிறார் என தகவல் வந்ததும் சோகமான ரசிகர்கள் அனைவரும் பரபரப்பாகினர். Retention நவ.26ஆம் தேதி நிறைவடைந்து, அடுத்த நாள் (நவ. 27) குஜராத் டைட்டன்ஸ் (Gujarat Titans) அணியில் இருந்து ஹர்திக் பாண்டியாவை டிரேட் செய்தது மும்பை இந்தியன்ஸ் அணி. உலகக் கோப்பை சோகம் மொத்தமாக மறைந்தது. 

அடுத்து இப்போது ஹர்திக் பாண்டியாதான் தங்கள் அணியின் கேப்டன் என அறிவித்துள்ளது. அதாவது இன்னும் மூன்று மாதங்களுக்கு பின் நடக்க உள்ள ஐபிஎல் தொடருக்கு (IPL 2024) இப்போதே கேப்டனாக ஹர்திக் அறிவிக்கப்பட்டார். காயத்தால் அவதிப்பட்டு வரும் அவர் எப்போது உடற்தகுதி பெறுவார் என்ற சந்தேகம் இன்னும் உள்ள நிலையில் மும்பை இந்தியன்ஸ் அணி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த அதிரடிகள் (?) எல்லாம் அணிக்குள்ளும் முணுமுணுப்பை ஏற்படுத்தியதாக தெரிகிறது. ரோஹித் சர்மா (Rohit Sharma) கேப்டன்ஸியில் இருந்து திடீரென இறக்கப்பட்டது சற்று அதிர்ச்சிகர முடிவாக பார்க்கப்பட்டது. சூர்யகுமார் யாதவ் (Suryakumar Yadv), பும்ரா (Bumrah) ஆகியோரும் அதிருப்தியில் இருப்பதாக அவர்கள் சமூக வலைதளத்தின் மறைமுக பதிவுகள் மூலம் தெரிந்துகொள்ளலாம். அவர்கள் அணியில் இருந்து வெளியேறிகிறார்கள் என்று கூட தகவல்கள் வந்தன. 

இருப்பினும், கேப்டன்சி மாற்றம் காரணமாக சச்சின் டெண்டுல்கர் (Sachin Tendulkar) மும்பை இந்தியன்ஸ் அணியை விட்டு வெளியேறியதாக தகவல்கள் கசிந்தன. இந்த வதந்திகள் ஆதாரமற்றவை, ஏனெனில் சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணியின் அடையாளமாக தொடர்கிறார். இதுகுறித்து எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

சச்சின் டெண்டுல்கர், ஐபிஎல் தொடரின் தொடக்கத்தில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணியுடன் இருக்கிறார். அவர் தொடர்ந்து மும்பை இந்தியன்ஸ் அணிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். அவர் ஐபிஎல் 2008 முதல் 2011 வரை மும்பை அணியின் கேப்டனாக இருந்தார். இருப்பினும், 2012, 2013ஆம் ஆண்டுகளில் அவர் பேட்டராக மட்டும் அணியில் நீடித்தார். 2014ஆம் ஆண்டு முதல் தற்போது வரை அவர் மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகிறார். அவரது மகன் அர்ஜூன் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸில் நீடிக்கிறார்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.