பொன்முடி மீதான விடுதலை ரத்து ஏன்? – திமுக வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ பேட்டி

சென்னை: “குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் பொன்முடி மீதான விடுதலையை ரத்து செய்துள்ளது” என திமுக எம்.பி.,யும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ தெரிவித்துள்ளார்.

பொன்முடிக்கு வழங்கப்பட்ட சிறை தண்டனை குறித்து திமுக எம்பியும், வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ பேட்டி அளித்தார். அதில், “கீழமை நீதிமன்றம் விடுதலை செய்தது. அதை உயர் நீதிமன்றம் மாற்றி எழுதியிருக்கிறது போன்ற காரணங்களால் 3 வருட சாதாரண சிறை தண்டனையும், ரூ.50 லட்சம் அபராதமும் விதித்து, சிறைத் தண்டனை ஒருமாதம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் உடனடியாக நாங்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம். மேல்முறையீட்டில் பொன்முடி நிச்சயம் விடுதலை செய்யப்படுவார் என்று நம்புகிறோம். ஏனென்றால் இந்த வழக்கில் பொன்முடியை பொறுத்தவரை வழக்கு தொடுக்கும்போதே வெறும் 4 ,80,000 ரூபாய் தான் கணக்கில் வராத பணமாக காட்டப்பட்டது. ஆனால், அவரின் மனைவி வெற்றிகரமாக பல நிறுவனங்களை நடத்தி வருகிறார். ஒருவருடத்துக்கு அவரின் வருவாய் ஏறக்குறைய 5 கோடி ரூபாய் என வருமான வரி மற்றும் வங்கிக் கணக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் உயர் நீதிமன்றம் ஏன் விடுதலையை ரத்து செய்து குற்றவாளி என்று கருதுகிற இடமென்றால், பொன்முடியின் மனைவி சரியாக வருமான வரி செலுத்தவில்லை என்ற ஒரே காரணத்துக்காக மட்டும்தான் விடுதலையை ரத்து செய்துள்ளது. 1996 – 2001ல் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக பொன்முடி மீது வேறொரு வழக்கு பதியப்பட்டுள்ளது. அந்த வழக்கில்ல், பொன்முடியின் மனைவிக்கு குடும்ப சொத்தாக 100 ஏக்கர் சித்தூரில் இருந்ததும், அவரின் சகோதரருக்கு சம்பந்தப்பட்ட நிறுவனங்களில் முதலீடுகள் செய்திருப்பதும் ஆதாரபூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த சாட்சியங்களை இன்று தீர்ப்பு வழங்கப்பட்ட வழக்கில் எடுத்துவரவில்லை. எனினும்கூட, பொன்முடியின் மனைவி விசாலாட்சி மிகவும் லாபகரமாக தன்னுடைய தொழில்களை நடத்திவந்தார் என்பதை இந்த வழக்கில் விசாரிக்கப்பட்ட வங்கி அதிகாரிகள், வருமான வரித் துறை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர். அதில் 5 கோடி ரூபாய்க்கு மேலாக ஒருவருடத்துக்கு வியாபாரம் நடத்தப்பட்டிருக்கிறது என்ற விவரங்கள் மிகத் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனால், குறித்த நேரத்தில் வருமான வரியை தாக்கல் செய்யாததுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று கூறி உயர் நீதிமன்றம் விடுதலையை ரத்து செய்துள்ளது. இந்த வழக்கில் நிச்சயமாக திமுக சட்டத்துறை சார்பில் மேல்முறையீடு செய்து மிக விரைவில் பொன்முடிக்கு விடுதலையை பெற்றுத்தருவோம்.

இது பழிவாங்கும் நோக்கத்தில் போடப்பட்ட வழக்கு. இந்த வழக்கின் புலன் விசாரணை அதிகாரியை குறுக்கு விசாரணை செய்யும்போது பொன்முடி வருமானத்துக்கும், அவரின் மனைவியின் வருமானத்துக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை. சம்பந்தப்பட்ட சொத்துக்கள் பொன்முடியின் வருமானத்தில் இருந்து வாங்கப்பட்டதற்கான ஆதாரங்களை தன்னால் திரட்ட முடியவில்லை என்று கீழமை நீதிமன்றத்தில் வாக்குமூலமாக கொடுத்துள்ளார். இதைவைத்தே கீழமை நீதிமன்றம் பொன்முடியை விடுதலை செய்தது. உயர் நீதிமன்றம் குறித்த நேரத்தில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை என்ற சந்தேகத்தில் சிறை தண்டனை விதித்துள்ளது.

ஆடிட்டரின் சரியான அறிவுரை இல்லாததால் பொன்முடி மனைவி விசாலாட்சி குறித்த நேரத்தில் வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. எனினும் அனைத்து வருடங்களுக்கும் முன்கூட்டியே வரி செலுத்தியுள்ளார். அதற்கு ஆதாரங்கள் உள்ளது. இதை உயர் நீதிமன்றம் கணக்கில் எடுத்துக்கொள்ள தவறிவிட்டது. நிச்சயமாக எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து விடுதலையை பெறுவோம்.” எனத் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.