சென்னை: கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை போர்கால அடிப்படையில், பணிகளை மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. மேலும், மின்சார பாதுகாப்பு தொடர்பாக பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: கடந்த வாரம் தென் மாவட்டங்களில் பெய்த வரலாறு காணாத கனமழை காரணமாக தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஏற்பட்ட மின்சார பாதிப்பினை, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் போர்கால அடிப்படையில், பணிகளை துரிதமாக மேற்கொண்டு தற்போது அனைத்து பகுதிகளுக்கும் சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கனமழை காரணமாக மின் வயர்கள் மற்றும் மின் சாதனங்கள் பழுது ஏற்பட்டிருக்க அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளபடியால், பொதுமக்கள் கீழ்கண்ட பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
- வீட்டில் மின் சுவிட்சுகளை ‘ஆன்’ செய்யும் போது பாதுகாப்புக்காக காலில் செருப்பு அணிந்து கொள்ளவும்.
- நீரில் நனைந்த ஃபேன், லைட் உட்பட எதையும் மின்சாரம் வந்தவுடன் இயக்க வேண்டாம்.
- வீட்டின் உள்புற சுவர் ஈரமாக இருந்தால் மின்சார சுவிட்சுகள் எதையும் இயக்கக் கூடாது.
- மின்சார மீட்டர் பொருத்தப்பட்டுள்ள பகுதி ஈரமாக இருந்தால் உபயோகிக்கக் கூடாது.
- வீட்டில் மின்சாரம் இல்லையென்றால் அருகில் இருந்து தாங்களாகவே ஒயர் மூலம் மின்சாரம் எடுத்துவரக் கூடாது.
- மின் கம்பி அறுந்து தொங்கிக் கொண்டிருந்தாலோ. மின் கம்பங்கள் உடைந்திருந்தாலோ, சாய்ந்திருந்தாலோ உடனடியாக மாநில மின் நுகர்வோர் சேவை மையமான மின்னகத்தை 94987 94987 என்ற அலைபேசி எண் மூலம் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.