தென் ஆப்ரிக்காவிற்கு எதிராக நடைபெற்றுவரும் இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 32 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வியைச் சந்தித்திருக்கிறது.
இந்நிலையில் இளம் இந்திய அணியினர் ஒரு பயிற்சிப் போட்டியில் கூட விளையாடாததே தோல்விக்குக் காரணம் என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

“தோல்விக்கான காரணம் என்னவென்றால் இளம் வீரர்கள் இங்கே எந்தப் போட்டியிலும் விளையாடியதில்லை. நீங்கள் பயிற்சி இல்லாமல் நேரடியாக வந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாடினால் அது தவறு. இந்தியா ஏ அணி தற்போது இங்கே விளையாடி வருகிறது. ஆனால், லாஜிக்படி அவர்கள் இங்கே முன்னமே வந்து ஆடியிருக்க வேண்டும்.
டீமுக்குள் பயிற்சி செய்வது மட்டுமே போதாது. அங்கே நம் பௌலர்கள் தென் ஆப்பிரிக்க பௌலர்கள் போல ஆக்ரோஷமாக யார்க்கர்கள், பவுன்சர்கள் வீசமாட்டார்கள். காரணம், பேட்டர்களுக்குக் காயம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம்தான். எனவே தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு இடையேயான போட்டிகளை நாம் ஆடுவது அவசியமானது.
இப்போதெல்லாம் 7 நாள்களுக்கு இடைவெளியுடன்தான் டெஸ்ட் போட்டிகள் நடைபெறுவது போல் அட்டவணை அமைக்கப்படுகிறது. அதனால் ‘பணிச்சுமை’ என்ற வார்த்தையை இந்திய கிரிக்கெட்டின் அகராதியில் இருந்து நீக்குங்கள்.

இங்கே சீனியர்கள் முதல் இரண்டு போட்டிகளில் சொதப்பினாலும் அவர்கள் கடைசி இரண்டு போட்டிகளில் விளையாடும் வாய்ப்பைப் பெற்றுவிடுவார்கள். ஆனால் இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் அப்படி அமையாது. அதனால் அவர்கள் இங்கே பயிற்சி ஆட்டங்களை ஆடுவது அவசியமான ஒன்று” என்று கூறியிருக்கிறார்.
கவாஸ்கர் சொன்னதுபோல யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மன் கில், ஸ்ரேயாஸ் ஐயர், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோர் தென்னாப்பிரிக்காவில் இதற்கு முன்பு டெஸ்ட் போட்டிகளே ஆடியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.