ராமர் கோவில் குறித்து மீண்டும் சர்ச்சை கருத்தை வெளியிட்ட பீகார் கல்வித்துறை மந்திரி

பாட்னா,

உத்தர பிரதேசம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி கோலாகலமாக நடைபெற உள்ளது. இதற்கான அழைப்பிதழ் வழங்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்தநிலையில், இந்நிகழ்வு குறித்து பீகார் கல்வித்துறை மந்திரி சந்திர சேகர் சமீபத்தில் அளித்த பேட்டியில்,

ராமர் நம் ஒவ்வொருவருக்குள்ளும், எல்லா இடங்களிலும் இருக்கிறார். அப்படியிருக்கும்போது, அவரைத் தேடி எங்கு செல்வீர்கள்? ராமர் கோவிலுக்கு ஒதுக்கப்பட்ட இடம் வெறும் சுரண்டலுக்கான இடம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த சில சதிகாரர்களின் பைகளை நிரப்பும் இடம் என தெரிவித்தார். இதற்கு பல்வேறு தரப்பில் இருந்து கண்டனம் தெரிவித்த நிலையில், மீண்டும் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார் பீகார் கல்வித்துறை மந்திரி சந்திர சேகர்.

அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ” உங்களுக்கு காயம் பட்டால் எங்கு செல்வீர்கள், கோவிலுக்கா, மருத்துவமனைக்கா? உங்களுக்கு கல்வி வேண்டும் என்றாலோ, அதிகாரி, எம்எல்ஏ அல்லது எம்பி., ஆக வேண்டும் என்றாலோ கோயிலுக்கு செல்வீர்களா, பள்ளிக்கூடம் செல்வீர்களா? போலி இந்துத்துவா மற்றும் போலி தேசியவாதம் குறித்து மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” எனக் கூறினார். மேலும் கோவில்கள் மன அடிமைத்தனத்திற்கான பாதை, பள்ளிகள் வாழ்க்கையில் ஒளி ஏற்றுவதற்கான பாதை” என்று சந்திரசேகர் கூறினார். இதற்கு பாஜக உள்ளிட்ட எதிர்க் கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

மாநில பாஜக மூத்த தலைவர் நிகில் ஆனந்த் பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், ” இதுபோன்ற அறிக்கைகளால் ராஷ்டீரிய ஜனதா தள தலைவர்கள் முஸ்லீம் வாக்காளர்களை மகிழ்விக்க முயற்சிக்கின்றனர். இந்துக்களை துஷ்பிரயோகம் செய்யவும், முஸ்லீம்களை திருப்திப்படுத்தவும் எந்த நிலைக்கும் செல்ல ராஷ்டீரிய ஜனதா தள தயாராக உள்ளது ” என்றார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.