செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கில் ஜன.22-ல் குற்றச்சாட்டுப் பதிவு @ சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம்

சென்னை: சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக வரும் ஜன.22-ம் தேதிக்கு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது. தன்னை கைது செய்யும் நோக்கத்தில், அமலாக்கத் துறை ஆவணங்களில் திருத்தம் செய்துள்ளதாக கூறி, செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடை சட்டத்தின்கீழ் அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறை அதிகாரிகள் கடந்த ஜூன் 14-ம் தேதி கைது செய்து, நீதிமன்ற காவலில் புழல் சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் செந்தில் பாலாஜிக்கு எதிராக அமலாக்கத் துறையினர் கடந்த ஆக.12-ல் குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளனர்.

நீதிமன்ற காவல் நீட்டிப்பு: செந்தில் பாலாஜியின் நீதிமன்றக் காவல் இன்றுடன் முடிவடைந்ததது. இதையடுத்து, புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, காணொலி காட்சி வாயிலாக சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.அல்லி முன்பாக ஆஜர்படுத்தப்பட்டார். அதையடுத்து நீதிபதி, அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை வரும் ஜனவரி 22-ம் தேதி வரை நீட்டித்து உத்தரவிட்டார்.

ஆவணங்களில் திருத்தம்: இந்நிலையில் செந்தில்பாலாஜி தரப்பில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், தனக்கு எதிராக அமலாக்கத் துறை சமர்ப்பித்துள்ள ஆவணங்களை, தனக்கு வழங்க வேண்டும். இந்த ஆவணங்களில் அமலாக்கத் துறை திருத்தங்களைச் செய்துள்ளது. தன்னை கைது செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன், அமலாக்கத் துறை இத்தகைய ஆவணங்களைத் தயாரித்து உள்ளது. இந்த வழக்கில், தனக்கு ஆவணங்களை வழங்காமல் முழுமையாக விசாரணையைத் தொடர்வது முறையற்றது என்று கோரியிருந்தார்.

ஜன.22ல் குற்றச்சாட்டுப் பதிவு: வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவுக்கு அமலாக்கத் துறை வரும் ஜன.22-ம் தேதிக்குள் பதிலளிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த வழக்கை குற்றச்சாட்டுப் பதிவுக்காக ஜன.22-ம் தேதிக்கு தள்ளிவைப்பதாக, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.