கிருஷ்ண ஜென்ம பூமி விவகாரம் | மதுரா மசூதியில் கள ஆய்வு: அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதிக்கு உச்ச நீதின்றம் தடை

புதுடெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம், மதுராவில் உள்ள ஷாயி ஈத்கா மசூதியில் ஆய்வு செய்ய ஆணையரை நியமிக்கும் அலகாபாத் உயர் நீதிமன்ற அனுமதி உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் இன்று (செவ்வாய்க்கிழமை) இடைக்காலக் தடைவிதித்துள்ளது. ஆய்வு செய்ய உள்ளூர் ஆணையரை நியமிக்க கோரும் மனு தெளிவற்றது என்று தெரிவித்துள்ள உச்ச நீதிமன்றம் ஆய்வுக்கு தடைவிதித்தும், இதுதொடர்பான வழக்குகள் உயர் நீதிமன்றத்தில் தொடந்து நடத்தலாம் என்றும் கூறியுள்ளது.

இதுகுறித்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை விசாரித்த நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, தீபங்கர் தத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு,” நீதிமன்றம் ஒரு ஆணையரை நியமிக்க ஒரு தெளிவற்ற மனுவினை நீங்கள் தாக்கல் செய்ய முடியாது. அது ஒரு குறிப்பிட்ட நோக்கமுடையதாக இருக்க வேண்டும். எல்லாவற்றையும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் விடமுடியாது” என்று தெரிவித்தனர்.

கிருஷ்ணர் பிறந்த இடமாகக் கருதப்படும் மதுரா, உ.பி.யின் புனித நகரமாக கருதப்படுகிறது. இங்குள்ள பழமையான கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலின் ஒரு பகுதி 1669-70-ல், முகலாயப் பேரரசர் அவுரங்கசீப்பால் இடிக்கப்பட்டது. பிறகு அந்த பாதி நிலத்தில் அவுரங்கசீப், ஷாயி ஈத்கா மசூதியை கட்டியுள்ளார். சுதந்திரத்திற்கு பின் அந்த நிலத்தை மீட்க இந்துக்கள், முஸ்லிம்களுடன் ஒரு உடன்பாடு செய்து மசூதியை ஒட்டியபடி புதிதாக கிருஷ்ண ஜென்ம பூமி கோயிலை கட்டியுள்ளனர்.

இந்நிலையில், அவுரங்கசீப்பால் கட்டப்பட்ட மசூதி இடிக்கப்பட்டு அந்த நிலத்தை மீட்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. இது, மத்திய அரசின் புனிதத்தலங்கள் பாதுகாப்பு சட்டம் 1991-ன்படியும், மதுராவின் இந்து-முஸ்லிம்களால் போடப்பட்ட ஒப்பந்தத்தினாலும் நீதிமன்றங்களால் ஏற்கப்படாமல் இருந்தது.

அயோத்தி ராமர் கோயில் வழக்கில் தீர்ப்பு வெளியானது. அதன் பிறகு கிருஷ்ண ஜென்ம பூமி குறித்த கோரிக்கை மீண்டும் எழுந்தது. மதுரா நீதிமன்றங்களில் பல்வேறு மனுக்கள் தொடுக்கப்பட்டன. உத்தர பிரதேசத்தின் மதுரா மசூதியில் களஆய்வு நடத்த அலகாபாத் உயர் நீதிமன்றம் கடந்த மாதம் அனுமதி அளித்தது.

இந்திய தொல்லியல் ஆய்வகம் மசூதியில் களஆய்வு நடத்தி புகைப்படங்கள் மற்றும் காட்சிப்பதிவுகளுடன் தனது அறிக்கையை அலகாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. களஆய்வுக்காக இந்து, முஸ்லிம் மற்றும் அரசு தரப்பில் மூன்று பிரதிநிதிகளை நியமிக்க கோரும் மனு மீதான விசாரணையில், நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஆணையரின் மேற்பார்வையில் கள ஆய்வு நடத்த அனுமதி அளித்திருந்தது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.