பிரதமர் மோடி இன்று கேரளா பயணம்

திருவனந்தபுரம்,

பிரதமர் மோடி கடந்த 3-ந் தேதி லட்சத்தீவில் ரூ.1,150 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கிவைத்தார். பின்னர் கேரள மாநிலம் திருச்சூர் சென்ற அவர், அங்கு பாஜக சார்பில் நடத்தப்பட்ட மகளிர் மாநாட்டில் கலந்து கொண்டார். சுமார் 2 வாரங்களுக்கு பிறகு மீண்டும் அவர் கேரளா வருகிறார்.

2 நாள் பயணமாக இன்று கொச்சி வரும் அவர், அங்கு மாபெரும் சாலைப் பேரணி (ரோடு ஷோ) ஒன்றை நடத்துகிறார். பின்னர் 17-ந் தேதி திருச்சூர் மாவட்டத்தின் குருவாயூர் செல்லும் பிரதமர் மோடி, அங்கு நடிகரும், முன்னாள் பாஜக எம்.பி.யுமான சுரேஷ் கோபியின் மகள் திருமணத்தில் பங்கேற்கிறார்.

இதைத்தொடர்ந்து மீண்டும் கொச்சி திரும்பும் அவர், அங்கே பாஜக கூட்டத்தில் கலந்து கொள்கிறார். இதில் கட்சியின் சுமார் 6 ஆயிரம் சக்தி கேந்திரா பகுதி பொறுப்பாளர்கள் கலந்து கொள்கிறார்கள். ஒரு சக்தி கேந்திரா என்பது 2 அல்லது 3 வாக்குச்சாவடி மட்டத்திலான பகுதிகளை கொண்டதாகும்.

இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து மத்திய அரசு திட்டங்கள் சார்ந்த நிகழ்ச்சிகளிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். அவற்றை முடித்து விட்டு அன்று மாலையில் அவர் டெல்லி புறப்பட்டு செல்கிறார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் ஒரே மாதத்தில் 2-வது முறையாக கேரளாவுக்கு பிரதமர் மோடி வருவது குறிப்பிடத்தக்கது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.