எஸ்.ஏ 20 ஓவர் லீக்; ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி சூப்பர் ஜெயண்ட்ஸ் அபார வெற்றி..!

டர்பன்,

தென்ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி கடந்த 10ம் தேதி தொடங்கியது. இந்நிலையில் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் மகராஜ் தலைமையிலான டர்பன் சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணி டு பிளெஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணியை எதிர்கொண்டது.

இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 145 ரன்கள் எடுத்தது. டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக க்ளாசென் 64 ரன்கள் எடுத்தார். சூப்பர் கிங்ஸ் அணி தரப்பில் வில்லியம்ஸ் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 146 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் அபார பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் 37 ரன்கள் வித்தியாசத்தில் டர்பன் சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. அந்த அணி தரப்பில் ரீஸ் டாப்லி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.