வேலூர்: பிரதான சாலையில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீர்… நிரந்தர தீர்வு காணுமா மாநகராட்சி?!

வேலூர் புதிய பேருந்து நிலையத்திலிருந்து பழைய பேருந்து நிலையத்தை நோக்கிப் பேருந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஜன்னலோர இருக்கையென்பதால், வெளிப்புறமே எனது பார்வை இருந்தது. அப்போதுதான் சாக்கடைக் கழிவுநீர் சாலையோரங்களில் தேங்கியிருப்பதைப் பார்த்தேன். பழைய பேருந்து நிலையத்தை அடைந்தவுடன், நடைப்பயணமாகவே அந்தச் சாக்கடைக் கழிவுநீர் தேங்கியிருந்த இடத்துக்குச் சென்றேன். அதுவொன்றும் சிறிய தெருவோ அல்லது மறைமுகமான சாலையோகூட கிடையாது. வேலூரிலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குச் செல்லும் பிரதான சாலைதான் அது. திருவண்ணாமலை மார்க்கமாக காட்பாடி, பெங்களூரு போன்ற இடங்களுக்கும் இந்தச் சாலை வழியாகத்தான் பேருந்துகள் செல்லும்.

அப்படி ஒரு பரபரப்பான சாலையிலேயே கழிவுநீர் தேங்கி, சுகாதாரச் சீர்கேடு நிலவுவது என்னை அதிர்ச்சியடையச் செய்தது. அதை ஏன் யாரும் சரி செய்யவில்லை… அப்படி என்ன சிக்கல் இருக்கும், இதைச் சரிசெய்வதில்… என்று எனக்குள்ளேயே கேள்விகள் எழ, சில தினங்களாகத்தான் இந்தப் பிரச்னை இருக்கும்போல என பதில் கூறிக்கொண்டு, என்னை நானே ஆசுவாசப்படுத்திக் கொண்டேன்.

அங்கிருந்த கடைக்காரர்களிடம், `ஏன் அண்ணே… இந்தப் பிரச்னை எத்தனை நாளா இருக்கு?’ என பேச்சுக் கொடுக்கையில், “ஒரு வருடத்துக்கும் மேலாக இந்த இடம் இப்படித்தான் தம்பி இருக்கு”  என்ற அவர்களின் பதில், என்னை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

`ஒரு வருஷமா இந்தப் பிரச்னை இருக்குதுனு சொல்றீங்களே, நீங்க மாநகராட்சி நிர்வாகத்திடம் தெரிவிச்சிருக்கலாமே..?’ எனக் கேட்டேன். அதற்கு, “நீங்க யாரு தம்பி… எதுக்கு இதெல்லாம் பத்தி கேக்குறீங்க..?” எனக் கேட்க, ஊடகத்திலிருந்து வந்திருப்பதை அவரிடம் சொல்லிவிட்டு, என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். “நீங்க பிரஸ்காரங்களா தம்பி…” எனக் கேட்டுவிட்டு, பேச்சைத் தொடர்ந்தவர், “ஒரு வருஷமா இந்தச் சாக்கடை கழிவுநீர் துர்நாற்றத்துலதான் தம்பி, வியாபாரம் செஞ்சுட்டு இருக்குறோம். இந்த அவலத்தை சரி செய்யுங்கன்னு மனு கொடுக்காத அதிகாரிங்க கெடையாது. கவுன்சிலர், மேயர், எம்.எல்.ஏ-னு எல்லார்கிட்டயும் சொல்லிப்பார்த்துட்டோம். எங்கப் புகார்கள வாங்கிட்டு, உடனே சரி செய்திடறோம்னு சொல்லுவாங்க… நாங்களும் நம்பிட்டு இருப்போம்.

ஆனா, எந்தவித நடவடிக்கையும் இருக்காது. இதுக்கு நிரந்தர தீர்வு வேணும்னுங்கிறதுதான் எங்களோட கோரிக்கை. ஆனா, கார்ப்பரேஷன் ஆளுங்க டேங்கரோட வந்து, இங்க தேங்கியிருக்குற சாக்கடைத் தண்ணிய மோட்டார் போட்டு எடுத்துட்டுப் போய்கிட்டு இருக்காங்களே தவிர, இதுக்கு நிரந்தர தீர்வுகாண ஒரு நடவடிக்கையும் இல்ல. இவங்க எடுத்துட்டுப் போவாங்க, கொஞ்ச நேரத்துலயே சாக்கடைத் தண்ணி ரோட்டுல தேங்கி நின்னுடும். இதுக்கு நிரந்தர தீர்வுகாண, டிஜ்ல இருக்க அடைப்ப எடுக்கணும். ஆனா, அதுவும் கொஞ்சம் சிரமம்தான். ரோட்ட ஒடச்சாத்தான் அது நடக்கும். ரோட்ட ஒடச்சாலும், மாச கணக்கா ஆகும், அத சரி பண்ண. இதனால போக்குவரத்துதான் பாதிக்கும். 

மனு கொடுத்து, கொடுத்து சலிச்சுப் போச்சு தம்பி. நீங்களே சொல்லுங்க… இந்த மாறி சாக்கடைத் தண்ணி எதிர தேங்கியிருக்கக் கடைக்குப் போவீங்களானு! இதுக்கு நிரந்தர தீர்வு காணணும்னு நெனச்சுருந்தா, எப்பவோ பண்ணியிருக்கலாம். பாப்போம் எப்போத்தான் எங்களுக்கு விடிவு காலம் வரும்னு” என்று தனது வருத்தத்தைத் தெரிவித்தார்.

அங்குள்ள மக்களின் கோரிக்கையை ஏற்று வேலூர் மாநகராட்சி நிர்வாகம் இந்தப் பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காணுமா அல்லது இனி வரும் காலங்களிலும் மோட்டார் போட்டே நீரை உறிஞ்சிக்கொண்டிருக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…

இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY

வணக்கம்,

BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.

ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.