ஏவுகணைத் தாக்குதல் எதிரொலி: ஈரான் தூதரை வெளியேற்றியது பாகிஸ்தான்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் மீது ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதலை அடுத்து, அந்நாட்டு தூதரை பாகிஸ்தான் வெளியேற்றி உள்ளது. இது தொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாகிஸ்தான் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மும்தாஜ் ஜாரா பலூச், “ஈரானில் உள்ள தனது தூதரை திரும்பப் பெற்றுக்கொள்ள பாகிஸ்தான் முடிவு செய்துள்ளது. பாகிஸ்தானுக்கான ஈரான் தூதர் தற்போது தனது நாட்டுக்கு சென்றுள்ளார். தற்போதைக்கு அவர் பாகிஸ்தானுக்கு வர மாட்டார்” என தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் மீது ஈரான் நேற்று (செவ்வாய்க்கிழமை) ஏவுகணை தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானில் உள்ள ஜெய்ஷ் அல்-அட்ல் (Jaish al-Adl) என்ற தீவிரவாத அமைப்பை குறிவைத்து இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக ஈரான் நாட்டு அரசு ஊடகம் தெரிவித்தது.

சன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த இந்த அமைப்பு, ஈரானின் சிஸ்டன் பலுசிஸ்தான் மாகாணத்தில் அடிக்கடி தாக்குதல்களை நடத்தி வருவதாக ஈரான் குற்றம் சாட்டி உள்ளது. குறிப்பாக, காவல் துறையினர் மற்றும் பாதுகாப்புப் படையினரை குறிவைத்து ஜெய்ஷ் அல்-அட்ல் தாக்குதல் நடத்துவதாக அந்நாடு தெரிவித்துள்ளது. இதன் காரணமாக அந்த அமைப்பை குறிவைத்து ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது.

இந்தத் தாக்குதலுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகம், “பாகிஸ்தான் நாட்டின் வான்வெளியில் ஈரான் அத்துமீறி நுழைந்து நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மூன்று சிறுமிகள் காயமடைந்துள்ளனர். இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது.

தீவிரவாதம் பொதுவான அச்சுறுத்தல் என பாகிஸ்தான் சொல்லி வருகிறது. அதைத் தடுக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை தேவை. இந்த மாதிரியான தாக்குதல்கள் அண்டை நாடுகளில் நம்பிக்கையை பாழாக்கும். தூதரக ரீதியாக பிரச்சினையை அணுக பல்வேறு வாய்ப்புகள் உள்ளபோது, ஈரான் தேர்ந்தெடுத்த வழி மிகவும் தவறானது” என குறிப்பிட்டுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.