புதுடில்லிஅயோத்தி ராமர் கோவில் நினைவு தபால் தலைகளை பிரதமர் நரேந்திர மோடி நேற்று வெளியிட்டார்.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் வரும் 22ல் ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடக்கவுள்ளது. இதையொட்டி, ஆறு நினைவு தபால் தலைகளை பிரதமர் மோடி நேற்று வெளியிட்டார்.
ராமர் கோவில், விநாயகர், ஹனுமன், ஜடாயு, சபரி, ராமர் – சீதையை படகில் அழைத்து சென்ற படகோட்டி அடங்கிய ஆறு தபால் தலைகள் வெளியிடப்பட்டன.
இவை தவிர அமெரிக்கா, நியூசிலாந்து, சிங்கப்பூர், கனடா, கம்போடியா உட்பட, 20 நாடுகள் ராமர் தொடர்பாக வெளியிட்டுள்ள தபால் தலைகளின் புத்தகத்தையும் அவர் வெளியிட்டார். இது 48 பக்கங்கள் அடங்கியது.
இது குறித்து பிரதமர் மோடி கூறியதாவது:
ராமர், சீதை மற்றும் ராமாயணம் காலம், சமூகம், ஜாதி, மதம் மற்றும் பிரதேசங்களின் எல்லைகளுக்கு அப்பால் சென்று அனைவருடனும் இணைந்துள்ளது.
அன்பினால் கிடைக்கும் வெற்றியின் மகத்துவத்தை ராமாயணம் உணர்த்துகிறது.
தியாகம், ஒற்றுமை மற்றும் துணிச்சலை இந்த கடினமான நேரத்தில் மக்களுக்கு போதிக்கிறது. எனவே தான் ராமாயண காவியம் உலக அளவில் அனைவரையும் ஈர்ப்பதுடன், மரியாதையுடன் பார்க்கப்படுகிறது.
ராமர் குறித்து இளைஞர்கள் நிறைய கற்றுக்கொள்ள இந்த தபால் தலைகளும், புத்தகங்களும் பேருதவியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ராமர் குறித்த தபால் தலைகளை பல்வேறு நாடுகளும் வெளியிட்டுள்ளன. இந்தியாவுக்கு வெளியேயும், பல்வேறு நாகரிகங்களிலும் ராமபிரான் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளார்.
கருவறை வந்தது ராமர் விக்ரகம்!
அயோத்தி ராமர் கோவில் கருவறையில் பிரதிஷ்டை செய்யப்பட உள்ள குழந்தை ராமர் விக்ரகம், நேற்று முன்தினம் இரவு ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கருவறைக்குள் வைக்கப்பட்டது.மைசூருவை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ், கறுப்பு நிற கல்லில் செதுக்கிய, 200 கிலோ எடை உடைய விக்ரகம், ‘கிரேன்’ உதவியுடன் கருவறைக்குள் வைக்கப்பட்டது. முன்னதாக கருவறைக்குள் சிறப்பு பூஜைகள் நடந்தன. இந்த விக்ரகம் வரும் 22ம் தேதியன்று மதியம் 12:20 மணிக்கு பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.நேற்றைய தினம் ராமர் விக்ரகத்தின் மீது புனித தீர்த்தம் ஊற்றி அபிஷேகம் செய்யப்பட்டது. பின், கணபதி பூஜை, வருண பூஜை, வாஸ்து பூஜை உள்ளிட்டவை செய்யப்பட்டன. 121 வேத விற்பன்னர்கள் இந்த பூஜையில் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்