நிலவில் தரை இறங்கிய ஜப்பான் விண்கலம்: வேகமாக சக்தியை இழந்து வரும் லேண்டர்

டோக்கியோ,

நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கி ஆய்வு செய்யும் பணிகளை பல்வேறு நாடுகளும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. இதில் இந்தியா உள்ளிட்ட ஒருசில நாடுகளே வெற்றியும் பெற்று இருக்கின்றன. இந்த வரிசையில் ஜப்பான் அனுப்பிய விண்கலத்தின் லேண்டர் வாகனம் (ஸ்லிம்) இன்று வெற்றிகரமாக நிலவின் மேற்பரப்பில் தரை இறங்கியது. துல்லிய தரை இறக்கம் தொழில்நுட்பத்தின் அடிப்படையில் இந்த லேண்டரை ஜப்பான் தரை இறக்கியது.

இதன் மூலம் அமெரிக்கா, சோவியத் யூனியன், சீனா, இந்தியாவை தொடர்ந்து 5-வது நாடாக ஜப்பானும் நிலவில் தரை இறங்கி சாதித்து உள்ளது. ஜப்பான் விண்கலம் நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரை இறங்கினாலும், அதன் செயல்பாட்டு நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் ஜப்பானின் லூனார் லேண்டர் நிலவை சென்றடையும், ஆனால் லேண்டர் வேகமாக சக்தியை இழந்து வருகிறது என்று விண்வெளி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக ஜப்பான் விண்வெளி நிலையம் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது,

சந்திரனை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டரின் மூன் லேண்டிங் முடிவுகள் (SLIM)

நிலவை ஆய்வு செய்வதற்கான ஸ்மார்ட் லேண்டர் (SLIM) ஜனவரி 20, 2024 அன்று காலை 12:20 மணிக்கு (JST) நிலவின் மேற்பரப்பில் வெற்றிகரமாக தரையிறங்கியது என்பதை ஜப்பான் விண்வெளி ஆய்வு நிறுவனம் (JAXA) உறுதிப்படுத்துகிறது. தரையிறங்கிய பிறகு விண்கலங்களுடனான தொடர்பு நிறுவப்பட்டது.

இருப்பினும், சூரிய மின்கலங்கள் தற்போது சக்தியை உருவாக்கவில்லை, மேலும் நிலவில் உள்ள SLIM இலிருந்து தரவு பெறுதலுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

பெறப்பட்ட தரவின் விரிவான பகுப்பாய்வு எதிர்காலத்தில் நடத்தப்படும், மேலும் நிலைமை குறித்த எந்த புதுப்பிப்புகளையும் நாங்கள் தொடர்ந்து பகிர்ந்து கொள்வோம்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சந்திரனில் சூரியக் கோணம் மாறுவதால், ஜப்பானின் சூரிய மின்கலம் மீண்டும் சார்ஜ் செய்ய முடியும் என்ற நம்பிக்கை இன்னும் உள்ளது. ஆனால் அதற்கு சிறிது நேரம் ஆகலாம். குளிர்ந்த சந்திர இரவில் ஸ்மார்ட் லேண்டர் (SLIM) உயிர்வாழ முடியுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.