அயோத்தி ராமர் கோயிலில் குவிந்த கட்டுக்கடங்கா பக்தர்கள்: காவலர்கள் திணறல்

அயோத்தி: அயோத்தி ராமர் கோயிலில் நேற்று (ஜன.22) பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற்றது. பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரதமர் நரேந்திர மோடி கருவறையில் பூஜை செய்தார். இந்நிலையில் கோயிலில் இன்று (ஜன.23) காலை முதல் பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையிலும், பின்னர் மதியம் 2 மணி முதல் மாலை 7 மணி வரையிலும் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் எனக் கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், ராமர் கோயில் பிராண் பிரதிஷ்டையைக் காண அயோத்தியில் குவிந்திருந்த பக்தர்கள் இன்று காலை கோயிலில் குழந்தை ராமரை தரிசிக்கத் திரண்டனர். காலை 3 மணி முதலே பக்தர்கள் தரிசனத்துக்கு ஆயத்தமாகினர். கூட்டம் கட்டுக்கடங்காமல் சென்றதால் காவல்துறையினர் திணறினர். கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல் ஆயிரக்கணக்கானோர் கோயிலுக்குள் செல்லக் கூடினர். அவர்களை சீர்படுத்தி கோயிலுக்குள் அனுமதிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இந்தப் பணி காவலர்களுக்கு சவால் நிறைந்ததாக அமைந்துள்ளது. அயோத்தி கோயிலில் இன்று காலை குவிந்த பக்தர்கள் கூட்டம் தொடர்பான காட்சிகள் அடங்கிய வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.

ராமர் கோயில் கடந்து வந்த பாதை: உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ஸ்ரீராமஜென்ம பூமியில் ராமர் கோயில் கட்டலாம் என்று உச்ச நீதிமன்றம் கடந்த 2019 நவம்பரில் தீர்ப்பளித்தது. இதைத் தொடர்ந்து, 2020 ஆகஸ்ட் 5-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார். உச்ச நீதிமன்ற உத்தரவின்படி அமைக்கப்பட்ட ஸ்ரீராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை, கோயில் கட்டுமான பணிகளை விரைவாக மேற்கொண்டது.

கோயில் வளாகம் சுமார் 72 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இதில் 2.7 ஏக்கரில் நாகரா கட்டுமான கலையில் 3 மாடிகள், 5 குவிமாடங்கள், கோபுரம் என 161 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டது. தொடர்ந்து நேற்று ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதிஷ்டை விழா கோலாகலமாக நடைபெற பால ராமர் கண் திறந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.