பிரதமர் மோடிக்கு கிடைத்த பாக்கியம் : இளையராஜா நெகிழ்ச்சி

அயோத்தியில் ராமர் கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு 'சென்னையில் அயோத்தி' எனும் நிகழ்ச்சி நாரத கான சபாவில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கவர்னர் ஆர்.என்.ரவி, இசையமைப்பாளர் இளையராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் இளையராஜா பேசியதாவது : சரித்திரத்தில் இது முதல் நிகழ்வு. தமிழ்நாட்டில் அல்ல, வட இந்தியாவில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுக்க முதன்முறையாக ஒரே ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது என்றால் அது இந்த நாள்தான். அது சரித்திரத்தில் என்றும் அழியா புகழை நமது இந்த காரியத்தை நல்லபடியாக முடித்தவர் பிரதமர் நரேந்திர மோடி. யாருக்கு கிடைக்கும் இந்த பாக்கியம் அவருக்கு கிடைத்திருக்கிறது. இது யாரால் முடியும்? எல்லோரும் செய்ய முடியுமா? முடியவே முடியாது. அவருக்கு பகவான் எழுதியுள்ளார். இந்தியாவில் எத்தனை பிரதமர்கள் வந்து போனார்கள்? யார் யார் என்ன செய்தார்கள்? எது சரித்திரத்தில் நிற்கிறது என்று கணக்கு பார்க்க வேண்டும். யார் செய்தது அதிகமாக இருக்கிறது என்றும் கணக்கு பாருங்கள்.

பிரதமர் மோடி செய்த இந்த காரியம் இருக்கிறதே, என்னால் சொல்ல முடியவில்லை. சொல்லும்போதே கண்ணில் நீர் வருகிறது. இந்த நாளில் இந்த நிகழ்ச்சியில் நான் பங்கேற்பது எனக்கு பெரும் மன நிறைவை தருகிறது. அதேநேரத்தில் இந்தவேளை அயோத்தியில் இருக்க வேண்டிய நான், இங்கே நின்றுகொண்டிருப்பது எனக்கு வருத்தம் அளிக்கிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.