18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்கு புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடக்கம்: தமிழக பொது சுகாதாரத் துறை

சென்னை: இந்தியாவில் தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதால் 18 வயதுக்கும் மேற்பட்டவர்களுக்குப் புற்றுநோய் பரிசோதனை திட்டம் தொடங்கப்படுகிறது என்று தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் தெரிவித்தார்.

இந்தியாவில் 2030-ம் ஆண்டுக்குள் இதயம், புற்றுநோய், சர்க்கரை நோய் உள்ளிட்ட தொற்றா நோய்களின் பாதிப்பு அதிகரிக்கும் என மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதனால், தொற்றா நோயைக் கட்டுப்படுத்தும் வகையில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

அந்த வகையில், தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட ஆண், பெண் ஆகிய இருபாலருக்கும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்ளும் திட்டத்தை, பொது சுகாதாரத் துறைசெயல்படுத்தியுள்ளது. முதல்கட்டமாக, ஈரோடு, ராணிப்பேட்டை, கன்னியாகுமரி, திருப்பத்துார் ஆகிய மாவட்டங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக, அம்மாவட்டங்களில் வீடு, வீடாக அழைப்புக் கடிதத்தை சுகாதாரப் பணியாளர்கள் வழங்கி வருகின்றனர்.

இது தொடர்பாக தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வவிநாயகம் கூறியதாவது: மூன்று விதமான புற்றுநோய் பாதிப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக, வாய் புற்றுநோய் இருபாலருக்கும் வருகிறது. அதனால், 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும், ஆரம்ப சுகாதார நிலையம், மாவட்ட தலைமை மருத்துவமனை, மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் இலவசமாக பரிசோதனை செய்து கொள்ளலாம். 3 ஆண்டுக்கு ஒருமுறை கட்டாயம் மறுபரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.

அதேபோல், 30 வயதுக்கு மேற்பட்ட பெண்கள், மார்பக புற்றுநோய், கர்ப்பப்பை புற்றுநோய் ஆகிய பரிசோதனைகளை செய்து கொள்வது அவசியம் ஆகும். புற்றுநோயை பொருத்தவரையில், ஆரம்ப நிலையில் கண்டறிந்து சிகிச்சை அளித்தால், உயிரிழப்பைத் தடுக்க முடியும்.

அந்த வகையில், 4 மாவட்டங்களில், 19 லட்சம் பெண்கள்உட்பட 52 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்ய இருக்கிறோம். அதன்பின், படிப்படியாக அனைத்து மாவட்டங்களிலும் பரிசோதனையை விரிவுபடுத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.