என் இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம்! -மிஷ்கின்

சவரக்கத்தி என்ற படத்தை இயக்கியவர் ஆதித்யா. இயக்குனர் மிஷ்கினின் தம்பியான இவர் தற்போது டெவில் என்ற படத்தை இயக்கி உள்ளார். இந்த படத்தில் விதார்த், பூர்ணா, மிஷ்கின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்கள். இந்த படத்திற்கு முதன்முறையாக மிஷ்கின் இசை அமைத்திருக்கிறார்.

பிப்ரவரி 2ம் தேதி திரைக்கு வரும் இந்த படத்தின் பிரஸ்மீட்டில் மிஷ்கின் பேசும்போது, ‛‛சிலர் என்னுடைய தம்பியை நான் தூக்கி பிடிப்பதாக பத்திரிகைகளில் எழுதுகிறார்கள். அதை பார்த்து நான் வெட்கப்பட்டேன். ஏனென்றால் என் தம்பி உதவி இயக்குனராக சேர வேண்டும் என்று என்னிடத்தில் கேட்டபோது செருப்பை தூக்கி எறிந்தவன் நான். அதன் பிறகு பார்த்திபன் சாரிடத்தில் பணியாற்றி விட்டு வந்த பிறகு தான் உதவி இயக்குனராக சேர்த்துக் கொண்டேன்'' என்று பேசினர்.

மேலும் மிஷ்கின் பேசியதாவது: ‛‛நடிக்கும் போது சுயத்தை இழப்பவர்கள் தான் சிறந்த கலைஞர்கள். பூர்ணா அப்படிப்பட்ட ஒரு நடிகை தான். அவர் என்னுடைய வாழ்வில் ஒரு முக்கியமான பெண். பூர்ணாவின் வயிற்றில் குழந்தையாக பிறக்க விரும்புகிறேன். என்னை ஒரு தாய் போன்று அவர் பார்த்துக் கொள்வார். என்னுடைய குழந்தையை விட அவர் குழந்தை நன்றாக இருக்க வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். பூர்ணா போன்றவர்கள் இறக்கும் வரை நடித்துக் கொண்டே இருக்க வேண்டும்.

மற்ற இயக்குனர்களின் படங்களில் அவர் நடிப்பாரா என்று எனக்கு தெரியாது. ஆனால் என் படங்களில் எப்போதுமே பூர்ணா நடிப்பார் என்று கூறிய மிஷ்கின், இசையில் எப்போதுமே இளையராஜாவும் ஏ.ஆர்.ரஹ்மானும் தான் நூற்றுக்கு நூறு வாங்குபவர்கள். நான் இளையராஜாவிடத்தில் சண்டை போட்டுக் கொண்டு வந்த பின்னர் 6 வருடங்களாக இசையை கற்றுக் கொண்டேன். இந்த படத்திற்கு இசையமைக்க வேண்டும் என்று என் தம்பி கேட்டதும் ஒத்துக் கொண்டேன். என்னுடைய இசைக்கு 35 மதிப்பெண் கொடுக்கலாம் என்று கருதுகிறேன்''. இவ்வாறு மிஷ்கின் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.