சென்னை கொரட்டூர், சிவலிங்கபுரத்தைச் சேர்ந்தவர் சுரேஷ். இவரின் மனைவி சியமளாதேவி. இந்தத் தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். சுரேஷ், அந்தப் பகுதியில் மளிகை கடை நடத்தி வந்தார். அதில் போதிய வருமானம் கிடைக்காததால் கடையை மூடிவிட்டார். அதனால் குடும்பச் செலவுக்காக சியமளாதேவி, அருகில் உள்ள இ-சேவை மையத்தில் வேலைக்குச் சென்று வந்தார். இந்தச் சூழலில் சியமளாதேவிக்கும் அவரின் கணவர் சுரேஷுக்கும் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்தது. இன்று காலையிலும் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த சுரேஷ், கத்தியால் மனைவி சியமளாதேவியைக் குத்தினார். இதில் ரத்த வெள்ளத்தில் அவர் கீழே சரிந்தார்.

பின்னர் சுரேஷ் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டார். இதையடுத்து சியமளாதேவி ரத்த வெள்ளத்தில் கிடந்ததைப் பார்த்த அவரின் குழந்தைகள், கதறி அழுதனர். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அங்கு வந்து பார்த்தனர். பின்னர் கொரட்டூர் காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு வந்த இன்ஸ்பெக்டர் ரமேஷ் தலைமையிலான போலீஸார், சியமளாதேவியின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
பின்னர், சியமளாதேவியின் கணவர் சுரேஷை போலீஸார் தேடினர். அவர், கொரட்டூர் ஏரிக்கரை பகுதியில் மது அருந்திக் கொண்டிருக்கும் தகவல் கொரட்டூர் போலீஸாருக்கு கிடைத்தது. உடனடியாக அங்கு சென்று அவரைப் பிடித்து காவல் நிலையத்துக்கு போலீஸார் அழைத்து வந்தனர். விசாரணையில், “மனைவி சியமளாதேவி வேலைக்குச் சென்ற பிறகு அவரின் நடவடிக்கைகளில் மாற்றம் தெரிந்தது. அதுதொடர்பாக அவரிடம் கேட்டபோது எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

அதனால்தான் ஆத்திரத்தில் சியமளாதேவியின் தொண்டையில் கத்தியால் குத்திவிட்டு தப்பிச் சென்றுவிட்டேன்” என்று சுரேஷ் தெரிவித்ததாக கொரட்டூர் போலீஸார் கூறினர். இதையடுத்து மனைவியைக் கொலைசெய்த குற்றத்துக்காக சுரேஷை போலீஸார் கைதுசெய்து, சிறையில் அடைத்தனர். அவர்களின் இரண்டு குழந்தைகளும் அம்மாவும் அப்பாவும் இல்லாமல் கதறி அழுத காட்சி, காண்பவர்களை கண்கலங்க வைத்தது.
இது குறித்து கொரட்டூர் போலீஸார் கூறுகையில், “கொலைசெய்யப்பட்ட சியமளாதேவி, இ-சேவை மையத்தில் அனைவரிடமும் அன்பாகப் பழகி வந்திருக்கிறார். அது, அவரின் கணவர் சுரேஷுக்குப் பிடிக்கவில்லை. அதனால் ஏற்பட்ட தகராறில்தான் இந்தக் கொலை நடந்திருப்பது எங்களின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. தொடர்ந்து விசாரித்து வருகிறோம்” என்றனர்.