"மழை பாதிப்பு… மத்திய அரசில் இருந்து இன்று வரைக்கும் ஒரு பைசா கூட வரவில்லை!" – கனிமொழி எம்.பி

கனிமொழி எம்.பி தலைமையில் 11 பேர் கொண்ட நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவினர் மதுரை வந்திருந்தனர். தனியார் மண்டபத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மதுரை, சிவகங்கை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களைச் சேர்ந்த தொழில்துறையினர், கல்வியாளர்கள், சிறுகுறு தொழில் முனைவோர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர் சங்கத்தினர், மருத்துவர்கள், தொண்டு நிறுவனத்தினர், அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்கள், பொதுமக்கள், திமுக நிர்வாகிகளை நேரடியாக சந்தித்து கோரிக்கைகளை மனுவாகவும் பெற்றார்.

கருத்துகளை கேட்டபோது

பின்பு செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, “இந்த ஆண்டு நடக்க உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்காக திமுக தலைவர் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிவுறுத்தலின்படி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் அறிக்கை குழு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு  சென்று அங்குள்ள பொதுமக்கள் மற்றும் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெற்று, அதன் அடிப்படையில் தேர்தல் அறிக்கை உருவாக்க வேண்டும் என்று அனுப்பியுள்ளார்.

எப்போதும் தேர்தல் அறிக்கை மக்களால் போற்றப்படும் அறிக்கையாக இருக்கும்படி தயார் செய்துள்ளோம். இந்தாண்டும் மக்களை சந்தித்து தேர்தல் அறிக்கை உருவாக்க கருத்து கேட்பு கூட்டம் நடத்துகிறோம். துத்துக்குடி, கன்னியாகுமரி முடித்துவிட்டு மதுரையில் மக்களை சந்தித்து கருத்துக்களை கேட்டுக் கொண்டிருக்கிறோம். மதுரை, தேனி, திண்டுக்கல், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் இருந்து பல்வேறு அமைப்புகள் எங்களிடம் கோரிக்கைகளை அளித்திருக்கிறார்கள்.

கோரிக்கைகளைப் படித்து முக்கியமான கோரிக்கைகளை முதலமைச்சரிடம் கொண்டு சென்று அவரின் ஒப்புதலை பெற்று தேர்தல் அறிக்கை வெளியிடுவோம்.

தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டம்

ஜி.எஸ்.டி-யில் இருக்கக்கூடிய பல்வேறு பிரச்னைகள், வரிகள் குறிப்பாக சிறுகுறு தொழில் செய்யக்கூடியவர்கள் மிகப்பெரிய அளவில் ஜி.எ.ஸ்டி-யால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார்கள்.

ரயில்வேயை பொறுத்தவரை தென் மாவட்டங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நிதி குறைவாகத்தான் ஒதுக்கப்படுகிறது. இன்று 100 நாள் வேலையில் பல குழப்பங்கள் உள்ளன, சரியாக சம்பளம் வராத சூழ்நிலை உள்ளது. விவசாயிகளுக்கு இருக்கக்கூடிய பிரச்னைகளை கோரிக்கையாக வைத்திருக்கிறார்கள்.

தேர்தல் அறிக்கை கருத்து கேட்புக் கூட்டம்

முதலமைச்சர் ஆட்சி பொறுப்பேற்றபோது ‘எங்களுக்கு வாக்களிக்காதவர்களும், ஏன் வாக்களிக்கவில்லை என்று நினைக்கக்கூடிய அளவுக்கு நாங்கள் ஆட்சியை நடத்துவோம்’ என்று சொல்லியிருந்தார். அப்படி இருக்கும்போது கூட்டணிக்கட்சி பிரதிநிதிகள் இருக்கும் தொகுதிகளில் எந்தத் திட்டத்தையும் செய்யவில்லை என்பது தவறான புரிதல். தலைவர் கலைஞர், முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோர் எப்போதுமே கூட்டணி கட்சிகளை மதித்து, அந்த பிரதிநிதிகளுக்கு எங்களைவிட அதிக முக்கியத்துவம் தந்து அரவணைத்து நடத்தக் கூடியதுதான் இந்தக் கூட்டணி.

இதற்கு முன் சட்டமன்றத் தேர்தலுக்கான அறிக்கையில் கொடுத்திருக்கக்கூடிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை நிறைவேற்றி இருக்கிறோம்.

அதற்கு முன் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக அளித்த வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றவில்லை. ரூ,15 லட்சம் தருகிறோம் என்றனர். இரண்டு தேர்தல் முடிந்துவிட்டது. யாருக்கும் வந்து சேரவில்லை. விவசாயிகளுக்கு தருவேன் என்று சொல்லி இருக்கக்கூடிய அந்தத் தொகை குறைந்து கொண்டே வருகிறது. யாருக்கும் சரியாக போய்ச்சேரவில்லை என்ற சூழ்நிலையை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கல்விக்கான நிதி குறைந்து கொண்டே வருகிறது.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார்கள். இன்னும் 50 ஆண்டுகளுக்குள்ளாவது இந்த மசோதா நிறைவேற்றப்படுமா என்ற சூழ்நிலைதான் தற்போது உள்ளது . இப்படிப்பட்ட ஒன்றிய அரசிடம்தான் பயணிக்க வேண்டிய அவலமான சூழ்நிலையில் இருந்து கொண்டிருக்கிறோம்.

கனிமொழி

மழை வெள்ளத்தால் சென்னையும், தென் மாவட்டங்களும் மிக மோசமாக பதிக்கப்பட்டது. ஆனால், இன்றுவரை நிவாரணங்களை எல்லாம் நம்முடைய முதலமைச்சர்தான் தந்து கொண்டிருக்கிறாரே தவிர மத்திய அரசு தரவில்லை. மத்திய அரசு சார்பில் அமைக்கப்பட்ட கமிட்டி, மூன்று முறை ஆய்வு செய்துள்ளனர். மத்திய அமைச்சர்கள் சென்னைக்கும், தென் மாவட்டங்களையும் பார்வையிட்டு சென்றார்கள். இன்று வரைக்கும் ஒரு பைசா கூட வரவில்லை. இப்படிப்பட்ட மனநிலையோடு தமிழ்நாட்டுக்கு எதுவும் செய்யக்கூடாது என்றுதான் மத்திய அரசு உள்ளது.

திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறது. மகளிருக்கு வழங்கக்கூடிய ஆயிரம் ரூபாய் திட்டத்தை, நிதிநிலை சிக்கல் இருந்தாலும் கொடுத்த வாக்குறுதியை முதல்வர் நிறைவேற்றியிருக்கிறார். கொடுத்த மற்ற வாக்குறுதிகளை ஒவ்வொன்றாகத்தான் நிறைவேற்ற முடியும். கண்டிப்பாக திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிச்சயமாக நிறைவேற்றும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.