கே.எல்.ராகுல் மற்றும் ஜடேஜாவுக்கு கண்டிஷன் போட்டுள்ள பி.சி.சி.ஐ

புதுடெல்லி,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இந்த தொடரில் இதுவரை 2 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.

இதையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 3வது டெஸ்ட் போட்டி வரும் 15ம் தேதி ராஜ்கோட்டில் தொடங்குகிறது.

இந்நிலையில் இந்த தொடரில் எஞ்சியுள்ள 3 போட்டிகளுக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. அதன்படி அறிவிக்கப்பட்ட அந்த அணியில் மொத்தம் 17 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். இதில் இடம்பெற்றுள்ள இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு பிசிசிஐ ஒரு கண்டிஷனை விதித்துள்ளது.

அதாவது முதல் போட்டியில் விளையாடியிருந்த அவர்கள் இருவரும், இரண்டாவது டெஸ்ட் போட்டியை காயம் காரணமாக தவறவிட்டனர். அதன் பின்னர் தற்போது தேசிய கிரிக்கெட் அகாடமி சென்று தங்களது உடற்தகுதியை நிரூபித்துள்ளனர். அதனால் அவர்கள் மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

ஆனால் அவர்கள் மீண்டும் இந்த தொடரில் இடம் பிடித்திருந்தாலும் பிட்னஸ் கிளியரன்ஸ் சர்டிபிகேட் இருந்தால் மட்டுமே அவர்களால் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாட முடியும் என்று பி.சி.சி.ஐ. தெரிவித்துள்ளது. இதன் காரணமாக கே.எல். ராகுல் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் முழு உடற்தகுதியுடன் இருந்தால் மட்டுமே எஞ்சியுள்ள மூன்று போட்டியிலும் விளையாடுவார்கள் என்று பி.சி.சி.ஐ. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.