எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை விவகாரம்: சபாநாயகர் மறுபரிசீலனை செய்ய முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை

சென்னை: எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கை தொடர்பான இபிஎஸ் கோரிக்கையை மறுபரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க சபாநாயகர் அப்பாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. ஆளுநர் உரை மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கை தொடர்பாக பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். எதிர்க்கட்சித் துணை தலைவர் இருக்கையில் ஓ.பன்னீர்செல்வம் உட்கார்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, புதிதாக எதிர்க்கட்சித் துணை தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்.பி.உதயகுமாருக்கு இருக்கையை அளிக்க வேண்டும் என அதிமுக தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகிறது. அதன்படி, இன்று அது குறித்து பேச வேண்டும் என அதிமுக உறுப்பினர்கள் சலசலப்பை ஏற்படுத்தினர். எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமியும் அதே கோரிக்கையை முன்வைத்தார்.

அப்போது எழுந்து பேசிய முதல்வர் ஸ்டாலின், “அதிமுக சட்டப்பேரவை துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உதயகுமாருக்கு இடம் ஒதுக்கி தருவது தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி தொடர்ந்து இந்த அவையில் பேசி வருகிறார். ஆனால், இது சபாநாயகருக்கு உள்ள உரிமை என்று இந்த விவகாரத்தில் பல முறை சபாநாயகர் அப்பாவு விளக்கம் அளித்துவிட்டார். இருந்தாலும் இந்த விவகாரத்தில் நான் கேட்டுக்கொள்வது, எதிர்க்கட்சித் தலைவர் கோரிக்கையை சபாநாயகர் மறுபரிசீலனை செய்து அதற்கு ஆவண செய்யுமாறு உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.” என்று தெரிவித்தார்.

அதற்கு பதிலளித்த சபாநாயகர் அப்பாவு, “முதல்வர் பரிந்துரைபடி இந்த கோரிக்கை குறித்து மறுபரிசீலனை செய்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.