சினிமா இயக்குனரின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்து மன்னிப்பு கேட்ட திருடர்கள்

உசிலம்பட்டி : இயக்குனர் மணிகண்டனின் தேசிய விருது, நகை, பணம் ஆகியவை கொள்ளை போன நிலையில் தேசிய விருதை மட்டும் திருப்பி தந்து மன்னிப்பு கடிதம் வைத்து சென்றுள்ளனர் திருடர்கள்.

‛‛காக்கா முட்டை, கிருமி, குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை, கடைசி விவசாயி'' போன்ற படங்களை இயக்கியவர் மணிகண்டன். இவற்றில் காக்கா முட்டை, கடைசி விவசாயி படங்களுக்காக தேசிய விருது வாங்கினார். இவரது மதுரை, உசிலம்பட்டி வீட்டில் கடந்தவாரம் திருட்டு நடந்துள்ளது. அவரின் 2 தேசிய விருதுக்கான பதக்கங்கள், 1 லட்சம் ரொக்கம் மற்றும் 5 பவுன் தங்க நகைகள் கொள்ளையடிக்கப்பட்டன. இதுபற்றி உசிலம்பட்டி நகர் காவல் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று(பிப்., 13) மணிகண்டனின் உசிலம்பட்டி வீட்டில் பாலித்தீன் பையில், ‛‛அய்யா எங்களை மன்னித்து விடுங்கள், உங்கள் உழைப்பு உங்களுக்கு…'' என குறிப்பிட்டு மன்னிப்பு கடிதத்துடன் இரண்டு தேசிய விருதுக்கான வெள்ளி பதக்கங்களை மட்டும் கொள்ளையர்கள் தொங்க விட்டுச் சென்றுள்ளனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.