தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்

10வது தேசிய சாரணர் ஜம்போரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயாராக உள்ளன என்று சாரணர் துணைத் தலைமை ஆணையாளர் எம்.எஸ்.எப். முஹீன் தெரிவித்தார்.

10வது தேசிய சாரணர் ஜம்போரியை முன்னிட்டு அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) விசேட ஊடகவியலாளர் சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, தேசிய சாரணர் ஜம்போரிக்கு எவ்வாறான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்…

விசேடமாக எமது கிழக்கு மாகாண நிறுவனத்தின் உதவியுடன் தேசிய ஜம்போரிக்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்த ஜம்போரியை சாரணர்களுக்கு வசதியாக 7 முகாம்களாக பிரித்துள்ளோம்.

பெண் சாரணர்களுக்கு விசேடமாக ஒரு பாசறையும், வெளியூர் சாரணர்களுக்கு ஒரு பாசறையும் ஏனைய சாரணர்களுக்கு மேலும் 5 பாசறைகளும் என்ற அடிப்படையில் 7 பாசறைகளை ஏற்பாடு செய்துள்ளோம்.

அவர்கள் ஒவ்வொரு பிரிவுகளாக பாசறைகளில் இருப்பார்கள். ஒரு பிரிவில் 40 சாரணர்கள் என்ற அடிப்படையில் அவர்களுக்கு பொறுப்பாக ஆணையாளர்களும் இருப்பார்கள். சாரணர்களுக்காக நாளுக்கு நாள் நடக்கக்கூடிய நிகழ்ச்சிகளுக்கு அவர்களை தயார்படுத்தி அந்நிகழ்வுகளுக்கு அனுப்புவதற்கு ஆணையாளர்கள் பொறுப்பாக இருப்பார்கள்.

இந்த ஜம்போரியில் பங்குபற்றும் ஒவ்வொரு சாரணர்களுக்கும் தேவையான அனைத்து வசதிவாய்ப்புக்களையும் நாம் மேற்கொண்டுள்ளோம். இதன்மூலம் இப்பாசறை அவர்களுக்கு வெற்றிகரமான ஒரு மறக்க முடியாத பாசறையாக அமையும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.