பிரம்மயுகம் படத்தின் சென்சார் சான்றிதழை திரும்ப பெற கோரி வழக்கு

மம்முட்டி நடிப்பில் கடந்த வருட இறுதியில் வெளியான கண்ணூர் ஸ்குவாட் மற்றும் காதல் தி : கோர் ஆகிய படங்கள் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் படத்திற்கு வெற்றி தேடித் தந்தன. இந்த வருடத்தில் மம்முட்டியின் முதல் படமாக தயாராகியுள்ள பிரம்மயுகம் வரும் பிப்ரவரி 15ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் கதை 18ம் நூற்றாண்டில் நிகழ்வது போல உருவாக்கப்பட்டுள்ளது. ராகுல் சதாசிவன் என்பவர் இயக்கியுள்ள இந்த படத்தில் மம்முட்டி முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவரது கதாபாத்திர தோற்றமே வித்தியாசமாக இருக்கிறது. அது மட்டுமல்ல இந்த படம் கருப்பு வெள்ளையில் மட்டுமே தியேட்டர்களில் திரையிடப்பட இருக்கிறது.

சமீபத்தில் வெளியான இந்த படத்தின் டிரைலரும் படத்தில் ஏதோ வித்தியாசமாக இருக்கிறது என்பதை பறை சாற்றுகிறது. அதேசமயம் இந்த படத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில கதாபாத்திரங்கள் இருநூறு வருடங்களுக்கு முன்பு வாழ்ந்த தங்களது முன்னோர்களை நேரடியாகவே குறிக்கிறது என்றும், அது அவர்களுக்கு அவப்பெயர் ஏற்படுத்தி தரும் விதமாக இருப்பதால் இந்த படத்திற்கு வழங்கப்பட்ட தணிக்கை சான்றிதழை திரும்பப் பெறுமாறும் உயர் நீதிமன்றத்தில் ஒரு தரப்பினர் வழக்கு தொடர்ந்து உள்ளனர். இதை விசாரித்த நீதிமன்றம் இதுகுறித்து பதில் அளிக்குமாறு படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.