மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிட சோனியா, ரேபரேலி தொகுதியில் களமிறங்க பிரியங்கா திட்டம்

கடந்த 1997 டிசம்பரில் சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். அவர் கட்சியில் சேர்ந்த சில மாதங்களில் காங்கிரஸின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 2017-ம் ஆண்டு கட்சித் தலைவர் பதவியில் இருந்து அவர் விலகினார். அவரது மகன் ராகுல் காந்தி புதிய தலைவராக பதவியேற்றார்.

கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் பெரும் பின்னடைவை சந்தித்தது. இதற்கு பொறுப்பேற்று தலைவர் பதவியில் இருந்து ராகுல்விலகினார். இதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்டில் காங்கிரஸின் தற்காலிக தலைவராக அவர் பதவியேற்றார். கடந்த 2022-ம் ஆண்டு அக்டோபரில் காங்கிரஸின் புதிய தலைவராக மல்லிகார்ஜுன கார்கே தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கடந்த 1999-ம் ஆண்டு உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் சோனியா காந்தி முதல்முறையாக போட்டியிட்டார். பின்னர் அவர் உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதிக்கு மாறினார்.

கடந்த மக்களவைத் தேர்தலிலும் ரேபரேலி தொகுதி அவர் வெற்றி பெற்றார். எனினும் வரும் மக்களவைத் தேர்தலில் சோனியா காந்தி ரேபரேலியில் போட்டியிட மாட்டார். ராஜஸ்தானில் இருந்து அவர் மாநிலங்களவை எம்பியாக தேர்வு செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுகுறித்து காங்கிரஸ் வட்டாரங்கள் கூறியதாவது: வயது முதுமை, உடல்நலக்குறைவு காரணமாக இந்த முறை ரேபரேலி மக்
களவைத் தொகுதியில் சோனியா காந்தி போட்டியிட மாட்டார். ராஜஸ்தான் சட்டப்பேரவையில் காங்கிரஸுக்கு போதிய எம்எல்ஏக்கள் உள்ளனர். அங்கிருந்து மாநிலங்களவைக்கு அவர் தேர்வு செய்யப்படுவார்.

உத்தர பிரதேசத்தின் ரேபரேலி தொகுதியில் சோனியா காந்தியின் மகள் பிரியங்கா காந்தி போட்டியிடக்கூடும். அவர் முதல்முறையாக தேர்தலை சந்திக்க உள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் டெல்லி வீட்டில் கடந்த திங்கள்கிழமை விரிவான ஆலோசனை நடைபெற்றது. இந்த விவகாரங்களில் கட்சி தலைமை விரைவில் இறுதி முடிவு எடுக்கும். இவ்வாறு காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பாஜக வட்டாரங்கள் கூறும்போது, “காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ், திரிணமூல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜிக்கு எதிராக பாஜக சார்பில் வலுவான வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.

கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி தொகுதியில் ராகுல் காந்தி தோல்வி அடைந்தார். வரும் தேர்தலிலும் அவர் தோல்வி அடைவார். பிரியங்கா காந்தி தேர்தலில் களமிறங்கினால் அவருக்கு எதிராகவும் வலுவான பாஜக வேட்பாளர் களமிறக்கப்படுவார்” என்று தெரிவித்தன.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.