பிரபு சாலமன் தயாரிப்பில், சமுத்திரகனி நடித்த ‘சாட்டை’ படத்தில் கதை நாயகனாக நடித்தவர் யுவன். அவரது திருமணம் சென்னையில் நடைபெற்றது.
‘சாட்டை’ படத்தின் மூலம் அறியப்பட்ட நடிகர் யுவன், அதனையடுத்து ‘கீரிப்புள்ள’, ‘இளமி’, ‘கமர்கட்டு’ என சில படங்களில் நடித்தார். அவரது அப்பா ஃபெரோஸ்கான், தொழிலதிபர். மகனை வைத்து ஒரு சில படங்களைத் தயாரித்தும், இயக்கியும் இருக்கிறார். சில படங்களிலும் குணசித்திர வேடத்தில் நடித்தும் இருக்கிறார் ஃபெரோஸ்கான்.

யுவனின் இயற்பெயர் அஜ்மல்கான். அப்பா பிசினஸ்மேனாக இருந்தாலும், சினிமாவில் நடிகராக ஜெயிக்க வேண்டும் என விரும்பியவர். அதன் காரணமாகவே ஃபெரோஸ்கான் தமிழில் தயாரிப்பாளராகக் களமிறங்கினார். அப்படியே மகனையும் சினிமாவிற்குள் கொண்டு வந்தார். யுவன் தமிழில் கடைசியாக பாலாவின் படத்தில் கமிட் ஆனார். ஒருசில நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்புக்கு பின், பாலா சூர்யாவின் ‘வணங்கான்’ படத்திற்குப் போனார்.
அதன்பின் அந்த படத்திற்கு அருண்விஜய் வந்தார்.. ஆக, யுவனின் படம் அப்படியே தாமதமாகி வருகிறது. இந்நிலையில் மகன் நடிக்கும் பாலா படத்தை தயாரிக்கவும் யுவனின் அப்பா திட்டமிட்டு வருகிறார். யுவன் – ரமீசா கஹானி இவர்களது திருமணம், சென்னையில் விஜிபி ரிசார்ட்டில் பிரபலங்கள் வாழ்த்துகளோடு நடந்துள்ளது.

யுவனின் திருமண வரவேற்பிற்கும், திருமணத்திற்கும் தமிழ் சினிமாவின் பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் பலர் பங்கேற்று மணமக்களை வாழ்த்தியுள்ளனர். தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி. கே வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜிபி சந்தோசம், கிளாரியன் பிரஸிடென்ட் ஹோட்டல் அபூபக்கர், மன்சூர் அலிகான் ,ரியாஸ்கான் , உமா ரியாஸ்கான், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா உள்பட பலரும் மணமக்களை வாழ்த்தினார்கள்.