தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக செல்வப் பெருந்தகை நியமனம்!

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்து வந்த கே.எஸ் அழகிரி அப்பதவியில் இருந்து மாற்றப்பட்டு தமிழ்நாடு சட்டமன்ற குழு தலைவராக இருந்து வந்த செல்வப் பெருந்தகை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்

2019-ம் ஆண்டு பிப்ரவரியில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமனம் செய்யப்பட்டார். கே.எஸ்.அழகிரி தலைமையில் தான் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டில் 2019 நாடாளுமன்ற தேர்தலையும், 2021 சட்டமன்ற தேர்தலையும் அதன் பிறகான உள்ளாட்சி தேர்தல்களையும் சந்தித்தது.

கே.எஸ் அழகிரி

கட்சியின் விதிமுறைகளின்படி இவரின் பதவிக்காலம் 2022-ம் ஆண்டு பிப்ரவரியுடன் நிறைவடைந்துவிட்டது. அப்போது புதிய தலைவரைத் தேர்வுசெய்வதற்கான பணியில் காங்கிரஸ் தலைமை தீவிரம் காட்டியது. இதனால் தலைவர் பதவியை பிடிக்க காங்கிரஸ் சட்டமன்ற குழுத் தலைவர் செல்வபெருந்தகை, கரூர் எம்.பி ஜோதிமணி, செல்லக்குமார் உள்ளிட்ட பல தலைவர்கள் முயற்சி மேற்கொண்டனர். இதனிடையே கட்சியின் தேசிய தலைவர் விவகாரம், மற்ற மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் உள்ளிட்ட காரணங்களால் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவருக்கான அறிவிப்பு வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.

இந்நிலையில், தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக செல்வ பெருந்தகை நியமனம் செய்யப்பட்டுள்ளார். செல்வ பெருந்தகை தற்போது தமிழக காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனை அடுத்து, தமிழ்நாடு காங்கிரஸ் சட்டமன்ற குழு தலைவராக ராஜேஷ் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளதாகவும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி வேணுகோபால் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

முன்னதாக நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வருவதால் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த கே.எஸ் அழகிரி மாற்றப்படுவதற்கு வாய்ப்பு இல்லை என்று கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றி அக்கட்சியின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.