ஓடிடி விவகாரம் : கேரளா தியேட்டர் சங்கத்தினர் ஸ்டிரைக் அறிவிப்பு

தியேட்டர்களுக்கு வந்து திரைப்படம் பார்ப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் குறைந்து கொண்டே போகிறது. இது தமிழகத்திற்கு மட்டுமல்ல மற்ற மாநிலங்களுக்கும் பொருந்தும். தெலுங்குத் திரையுலகம் மட்டும் ஓரளவிற்கு தாக்குப் பிடிக்கிறது என்று சொல்கிறார்கள்.

அதே சமயம் நல்ல படங்களைக் கொடுக்கும் மலையாளத் திரையுலகத்திலும் தியேட்டர்கள் தள்ளாடிக் கொண்டிருக்கின்றன என்கிறார்கள். ஒரு படம் தியேட்டர்களில் வெளியான பிறகு ஆறு வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிட அனுமதிக்க வேண்டும் என்பதை தயாரிப்பாளர்கள் மீறுவதாக கேரள திரைப்பட தியேட்டர்கள் சங்கத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

அது மட்டுமல்லாது வருமானத்தைப் பகிர்வது, புராஜக்டர்களை தியேட்டர்களில் நிர்மாணிப்பது உள்ளிட்ட சில விஷயங்கள் குறித்தும் கடந்த ஆறு மாத காலமாக தயாரிப்பாளர்கள் சங்கம் எந்த முடிவையும் எடுக்கவில்லை. சில தயாரிப்பாளர்கள் திரைத்துறையை அவர்களது கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்கள். தியேட்டர் ஓனர்களை மிரட்டுகிறார்கள் என்றும் தியேட்டர்கள் சங்கத்தினர் சார்பில் முன்வைக்கப்படுகிறது.

இதற்கான தீர்வுகள் கிடைக்கும் வரை பிப்ரவரி 22ம் தேதி முதல் புதிய படங்களை தியேட்டர்களில் திரையிட மாட்டோம் என்றும் அறிவித்துள்ளார்கள். இது தொடர்பான பேச்சுவார்த்தை நாளை நடைபெறலாம் எனத் தெரிகிறது.

தமிழில் புதிய படங்கள் வெளியான 4 வாரங்களுக்குள் ஓடிடி தளங்களில் வெளியாகிவிடுகிறது. அதற்கு தமிழக தியேட்டர்கள் சங்கத்தினர் ஏற்கெனவே எதிர்ப்புகளைத் தெரிவித்துள்ளார்கள். ஹிந்தியில் மட்டும் 8 வாரங்களுக்குப் பிறகே ஓடிடி தளங்களில் வெளியிடுகிறார்கள். அப்படி ஒப்பந்தம் போடாத படங்களை தங்களது மல்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அந்த சங்கத்தினர் திரையிடுவதேயில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.