கனா கண்டேன்… வென்றேன் : அட.. டா.. அக்சதா அஜித்

சினிமாவில் நடிக்க பலருக்கும் ஆசை இருக்கிறது. ஆனால் பல திறமைகள் இருந்தும் அந்த ஆசையை நோக்கி ஒருசிலர் தான் வேகமாக ஓடிச் சென்று வெற்றி கோட்டை தொடுகின்றனர். தடை கடந்து சாதிக்கின்றனர். இதேபோல் வெற்றியை வசமாக்கி தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி இருப்பவர் அக்சதா அஜித்.

வெப்சிரீஸ், குறும்படங்களில் நடித்து சினிமாவிலும் கால்பதித்தித்து பார்ப்பவர்களை 'என்ன பொண்ணுடா' என சொல்ல வைக்கும் அளவிற்கு கவர்கிறார் சென்னையை சேர்ந்த கல்லுாரி மாணவி அக்சதா அஜித்… இவர் கூறியதாவது:

நான் 5ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே விளம்பரங்களில் நடிக்க தொடங்கி விட்டேன். என் அப்பா, அம்மா, அக்கா என குடும்பமே ஆதரவு கொடுத்தார்கள். பள்ளிப்பருவங்களில் எல்லா நாடகங்களிலும் பங்கேற்று முக்கிய ரோலை என் பக்கம் ஈர்த்து விடுவேன். இந்த ஆர்வம் தான் என்னை சினிமா பாதைக்கு அழைத்து வந்தது.

பள்ளிப்படிப்பை முடிக்கும் நேரத்தில் கனா காணும் காலங்கள் வெப்சிரீசில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. செல்லா எனும் கேரக்டரில் சுட்டி பொண்ணாக நடித்து என் திறமையை நிரூபித்தேன். அப்படியே யூடியூப் சேனலில் 'டூ யு லவ் மீ' வெப்சிரிசில் நடித்தேன். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

கனா காணும் காலங்களில் என் நடிப்பை பார்த்து சினிமா வாய்ப்பு வந்தது. தற்போது 4 பெரிய படங்களில் 2வது கதாநாயகியாக நடித்து வருகிறேன். நாடகங்களிலும் வாய்ப்பு வருகிறது. என் கனவு ஆசை எல்லாமே சினிமா தான். முதலில் என்னை இதில் நிரூபித்து விட்டு பிறகு எல்லா இடங்களிலும் கால் பதிப்பேன்.

முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க தான் எனக்கு பிடித்திருக்கிறது. அப்போது தான் மக்கள் மனதில் ஞாபகமாக வைத்திருப்பார்கள். நன்றாக ஆடுவேன்; பாடுவேன். இது என் நடிப்பிற்கு உதவுகிறது. சிலம்பம் விளையாட்டிலும் கில்லாடி நான்.

பெரிய சாதனையாளராக வேண்டும் என கனா கண்டேன். அதற்காக உழைத்தேன். நாம் என்ன நினைக்கிறோமோ அது கட்டாயமாக நடக்கும் என்பதை என் வாழ்வில் கற்று கொண்டுள்ளேன் என்றார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.