மராத்திய மன்னன் சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகள் ஊர்வலம் நடத்தி பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடினர். கோவா மாநிலத்திலும் குறைந்த அளவில் மராத்தியர்கள் இருக்கின்றனர். அங்கு கொங்கனி மக்கள் அதிக அளவில் இருக்கின்றனர். கோவா மாநிலத்தில் உள்ள சாவ் ஜோஸ் டி ஏரியல் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் திடீரென தனியார் நிலம் ஒன்றில் சத்ரபதி சிவாஜியின் சிலையை யாரோ நிறுவினர். நேற்று சத்ரபதி சிவாஜியின் பிறந்த நாளை கொண்டாட சிவாஜி ஆதரவாளர்கள் சிலர் சிலை வைக்கப்பட்ட இடத்தில் தயாராகிக்கொண்டிருந்தனர். உடனே உள்ளூர் மக்கள் 150 பேர் திரண்டு வந்து தனியார் நிலத்தில் சட்டவிரோதமாக சிலை வைக்கப்பட்டு இருப்பதாக கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிலை வைக்க பஞ்சாயத்தில் அனுமதி கொடுக்கப்படவில்லை என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.

சிலை வைக்கப்பட்டுள்ள நிலம் சர்தாஜ் என்பவருக்கு சொந்தமானது என்றும், அவரிடம் தடையில்லா சான்று வாங்கினீர்களா என்று கேட்டும் சிலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் வாக்குவாதம் செய்தனர். ஆனால் சிலை வைத்தவர்கள் நில உரிமையாளரிடம் பெற்ற தடையில்லா சான்றை காண்பிக்கவில்லை. நிலம் எஸ்.டி சமுதாயத்திற்கு சொந்தமானது என்றும், சிலை வைக்க அனுமதி கேட்டு பஞ்சாயத்தில் கடிதம் கொடுக்கப்பட்ட போது அதற்கு அனுமதி கொடுக்கவில்லை என்றும் கிராம மக்கள் தெரிவித்தனர். கிராமத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்கள் இச்சிலையை நிறுவி இருப்பதாகவும் குற்றம் சாட்டினர்.
இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் போலீஸார் வரவழைக்கப்பட்டனர். சிலையை திறந்து வைக்க மாநில சமூக நீதித்துறை அமைச்சர் சுபாஷ் பால் தேசாய் அங்கு வந்தார். அவர் பொதுமக்களின் எதிர்ப்பை மீறி சிலையை திறந்துவைத்துவிட்டு சிலை வைத்தவர்களுக்கு சாதகமாக பேசினார். அதோடு தனியார் நிலத்தில் அனுமதி பெற்றுத்தான் சிலை வைக்கப்பட்டு இருப்பதாக அமைச்சர் தெரிவித்தார். உடனே கோபம் அடைந்த மக்கள் அங்கிருந்த கல் மற்றும் சேற்றை எடுத்து அமைச்சர் மீது எறிந்தனர்.
இதில் ஒரு கல் அமைச்சர் மீது பட்டு காயம் அடைந்தார். அவர் அந்த இடத்தில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டார். உடனே போலீஸார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். நிலைமை இன்னும் பதற்றமாகவே இருக்கிறது. அந்த இடத்தில் கொண்டு வந்து சத்ரபதி சிவாஜி சிலையை யார் வைத்தது என்பது குறித்து விசாரித்து வருவதாக துணை போலீஸ் கண்காணிப்பாளர் சந்தோஷ் தேசாய் தெரிவித்தார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group…
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்… https://bit.ly/47zomWY
வணக்கம்,
BIG BREAKINGS முதல்… அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்… https://bit.ly/47zomWY