த்ரிஷாவிற்கு ஆதரவாக களமிறங்கிய திரையுலகினர் : அவதூறு பரப்பிய அதிமுக., நிர்வாகிக்கு வலுக்கும் எதிர்ப்பு

கடந்த 2017ம் ஆண்டு அ.தி.மு.க.,வில் ஏற்பட்ட பிளவு காரணமாக, அக்கட்சியின் எம்.எல்.ஏ.,க்கள், அணி மாறிவிடக்கூடாது என்பதற்காக சசிகலா கட்டுப்பாட்டில் மகாபலிபுரம் அருகே கூவத்தூரில் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். இது தொடர்பாக முன்னாள் அ.தி.மு.க., நிர்வாகி ஏ.வி.ராஜூ என்பவர் ஒரு வீடியோவில் பேசி இருந்தார். அதில், நடிகை த்ரிஷா குறித்து அவதூறாக பேசியிருந்தார். அந்த வீடியோ சமூகவலைதளத்தில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு திரையுலகை சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

சேரன்
சேரன் வெளியிட்ட அறிக்கையில், ‛வன்மையாக கண்டிக்கிறேன். எந்த ஆதரமுமின்றி பொது வெளியில் திரைத்துறையினர் பற்றி பெயர் சொல்லி அவதூறு கிளப்பிய இவர் மீது சட்டமும் போலீசாரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். நடிகர் சங்கமும் இதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கும் என நம்புகிறேன்' எனத் தெரிவித்திருந்தார்.

கஸ்தூரி
நடிகை கஸ்தூரி வெளியிட்ட வீடியோவில், ‛‛சமீப காலமாக சினிமா நடிகைகளை பொது வெளியில் கொச்சையாக பேசுவது அதிகரித்துள்ளது. வாய், நாக்கு இருப்பதற்காக வாய்க்கு வந்தபடி பேசுவதா? பார்க்காத ஒரு விஷயத்தை பார்த்த மாதிரி எப்படி பேசலாம். ஏவி.ராஜூவுக்கு கட்சிக்குள் பிரச்னை இருக்கலாம், அதற்காக நடிகைகளை அசிங்கமாக பேசலாமா? அவதூறாக பேசிய ராஜூ மீது நடவடிக்கை எடுப்பார்கள் என நம்புகிறேன்'' எனக் கூறியிருந்தார்.

த்ரிஷா
த்ரிஷா, ‛‛கவனத்தை ஈர்ப்பதற்காக எந்த நிலைக்கும் கீழே இறங்கும் கீழ்த்தரமான மற்றும் கேவலமான மனிதர்களை மீண்டும் மீண்டும் பார்ப்பது அருவருப்பானது. இது குறித்து சட்டப்பூர்வ நடவடிக்கை எடுப்பேன்'' என தெரிவித்துள்ளார்.

மன்சூர் அலிகான்
லியோ படத்தை வைத்து த்ரிஷாவுக்கு எதிராக சில அவதூறு கருத்துக்களை முன்பு நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்து இருந்தார். இதுதொடர்பான வழக்கு கோர்ட் வரை சென்றது. இந்நிலையில் த்ரிஷாவிற்கு ஆதரவாக களமிறங்கி உள்ளார் நடிகர் மன்சூர் அலிகான். அவர் வெளியிட்ட அறிக்கையில், “எனது திரைத்துறையில் உள்ள பெண்களை யாரேனும் போகிறபோக்கில் கேவலமாகவும், மலிவாகவும் விளம்பரத்திற்காகவும், சுயலாபத்திற்காகவும் அவமானப்படுத்தும் செயலை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

திரைத்துறையில் உள்ள சகோதரிகள் எனது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். சக திரைநாயகி திரிஷாவை தவறாக மிகவும் ஈனத்தனமான விமர்சனத்திற்கு உள்ளாக்கிய முன்னாள் அதிமுக நிர்வாகி அரசியலில் இருப்பதற்கே அருகதையற்றவராக நான் கருதுகிறேன். இதுபோன்ற இழிசெயலை அதுவும் நம் மாநிலத்திலே ஒருவரை ஒருவர் சார்ந்திருக்கிற துறையிலே அரசியலில் இருந்துதான் திரைக்கு வருகிறார்கள், திரையில் இருந்து அரசியலுக்கு வந்து ஆட்சி செய்கிறார்கள். இவ்வாறு பின்னிப்பிணைந்து இருக்கிற ஒரு மண்ணில் இதுபோன்று யாரையும் காயப்படுத்துவதை நான் மிகவும் சொல்வதற்கு வார்த்தையில்லை அவ்வளவு அருவருப்பாக இருக்கிறது இதுபோன்றவர்களின் செயல். இதுபோன்றவர்களின் செயலை 'இந்திய ஜனநாயகப் புலிகள் கட்சி' கடும் கோபத்துடன் பார்க்கிறது. எனவே உரியவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்!

இயக்குனர் திரு
ஆதாரமற்ற வதந்திகளைப் பார்த்து வருத்தம் அடைந்தேன். அவருடைய அசாத்திய திறமையும் அறிவும் பறைசாற்றுகிறது. உங்களுக்கு இன்னும் அதிக சக்தி கிடைக்க வேண்டும் த்ரிஷா. நான் உங்களை ஆதரிக்கிறேன்.

குஷ்பு
பெண்கள் குறித்து கேவலமான கருத்துக்களை தெரிவிப்பவர்கள் ஒரு பெண்ணுக்குதான் பிறந்தார்களா என்பது கேள்விக்குறியான ஒன்று என்று குஷ்பூ குறிப்பிட்டுள்ளார்.

சின்மயி
இந்த ஆண்கள் தங்கள் வளர்ப்பு மற்றும் விரக்தியைக் காட்டுகிறார்கள். நீங்கள்(த்ரிஷா) அவர்களை விட மிகவும் வலிமையானவர். உங்கள் பயணத்தை அதே கண்ணியத்துடனும் மரியாதையுடனும் தொடருங்கள்.

இயக்குனர் பேரரசு
அசிங்கவாதிகளாக சில அரசியல்வாதிகள்! அவர்களின் பேச்சில் விஷயம் இருக்கிறதோ இல்லையோ விஷம் இருக்கிறது! சமீபத்தில் ஒரு அரசியல்வாதி குறிப்பிட்ட நடிகைகளின் பெயரைச் சொல்லி அயிட்டம் என்று சொன்னது ஏ.வி.ராஜூ என்பவர் இப்பொழுது திரிஷாவின் பெயரை குறிப்பிட்டு கூவத்தூர் கூத்தில் சம்பந்தப்படுத்தியது இதெல்லாம் அருவருக்க செயலாகும்!

ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசி அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் மன உளைச்சலுக்கு உண்டாக்கிவிட்டு பின் மன்னிப்பு என்ற ஒற்றை வார்த்தையில் முற்றுப்புள்ளி வைப்பது சரியாகாது. இந்த மாதிரியான அநாகரீக செயலுக்கு பாதிக்க பட்டவர்கள் புகார் கொடுத்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதில்லாமல், காவல்துறையே தானாக முன்வந்து இந்த மாதிரி நபர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தான் இப்படிப்பட்ட அசிங்க பேச்சுக்கள் அரங்கேறாமல் இருக்கும்!

ஆர்கே செல்வமணி
பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி வெளியிட்ட அறிக்கை : “அதிமுக.,விலிருந்து நீக்கப்பட்ட ஏ.வி.ராஜூ என்பவர் திரைத்துறையை குறித்து சில தரமற்ற, அவதூறுகளை கூறியிருக்கிறார். ஆட்சி அதிகாரத்தை கைப்பற்ற நடந்த போட்டியில் 2017-ல் கூவத்தூரில் நடந்ததாக நடிகை த்ரிஷாவை சம்மந்தப்படுத்தி ஒரு அவதூறை கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாது பல நடிகைகள் என்று பலரையும், நடிகர் கருணாஸையும் சம்மந்தப்படுத்தி இந்த கீழ்தரமான செய்தியை வெளியிட்டுள்ளார்.

உங்கள் அரசியல் பிரச்னையில் தேவையில்லாமல் ஆதாரமற்ற குற்றசாட்டுகளை, கீழ்தரமான அவதூறுகளை திரையுலக பெண்கள் மீது சுமத்தாதீர்கள். இதை பெப்சி வன்மையாக கண்டிக்கிறோம். பஞ்சாயத்து தலைவரிலிருந்து குடியரசு தலைவர் வரை ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற, இந்த பாரத தேசத்தில் “பெண்கள் மீதும் அவர்களின் பெண்மை மீதும்” நடத்தப்படுகின்ற இம்மாதிரியான அவதூறு தாக்குதலை இரும்புக்கரம் கொண்டு களைய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுக்களுக்கு பணிவு அன்புடன் வேண்டுகோள் விடுக்கின்றோம்”.

விஷால்
ஒரு அரசியல் கட்சியைச் சேர்ந்த ஒரு முட்டாள் நம் திரையுலகைச் சேர்ந்த ஒருவரைப் பற்றி மிகவும் கேவலமாக பேசியதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் பெயரையோ, நீங்கள் குறிவைத்த நபரின் பெயரையோ நான் குறிப்பிட மாட்டேன். ஏனென்றால் நீங்கள் விளம்பரத்திற்காக இதைச் செய்தீர்கள் என்பது எனக்குத் தெரியும். உண்மையைச் சொன்னால், நான் உங்களைக் கண்டிக்க விரும்பவில்லை, இது ஒரு குறையாக இருக்கிறது. ஆனால் நீங்கள் நரகத்திற்கு போவீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் ஒரு முறை நடிகர் சங்க பொதுச்செயலாளர் என்ற முறையில் இந்த அறிக்கையை வெளியிட விரும்பவில்லை, ஆனால் ஒரு மனிதனாக, பூமியில் உங்களால் நிச்சயமாக, ஒருபோதும் இருக்க முடியாது. இது பிரபலங்களைப் பற்றிய எதிர்மறையான விளம்பரத்தில் பணம் சம்பாதிக்க முயற்சிக்கும் ஒரு போக்காக மாறிவிட்டது. குறைந்தபட்சம் சில அடிப்படை ஒழுக்கங்களையாவது கற்றுக்கொள்ள ஆரம்பியுங்கள்.
நடிகர் சங்கம்
தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் தலைவர் நாசர் வெளியிட்ட அறிக்கை : தற்போது பொது வலைதளங்களில் சகோதரி திரிஷா, சகோதரர் கருணாஸ் குறித்து கேட்பதற்கு கூசுகின்ற ,ஆதாரமற்ற, பொறுப்பற்ற, தரமற்ற, கீழ்தரமான, வக்கிரமனப்பான்மையோடு, பரவ விடப்பட்டிருக்கும் பொய்கதையை தென்னிந்திய நடிகர் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது.

திரைத்துறையை சார்ந்த பிரபலங்களை பற்றி பொதுவெளியில் அவதூறு பரப்பி சுய விளம்பரம் தேடிக் கொள்ளும் நபர்கள் நாளுக்கு நாள் அதிகமாகி வருகின்றனர். எல்லோரும் வெட்கித் தலைகுனியும்படி மீண்டும் ஒரு நிகழ்வு நிகழ்ந்துள்ளது. அதுவும் பொது வாழ்க்கையில் இருக்கும் நபரே தனது அரசியல் சுயலாபத்துக்காக பரப்புவது வேதனை அளிக்கிறது.

கவனத்தை ஈர்த்துக் கொள்ளவும், கேட்போரை கீழ்த்தரமானவராய் கருதியும், இத்தகைய செயல்கள் நடந்தேறுவது, இனியும் நடக்க கூடாத வகையில் நடிகர் சங்கம் தீவிரமான முடிவுகளை எடுக்கும், சட்ட ரீதியாய் இக்குற்றத்தை அணுகவும் செய்யும். பிரபலங்கள் பதில் பேச மாட்டார்கள் என்கிற பலத்தை பலவீனமாக்கி விளையாடுவதை இத்தோடு நிறுத்திக் கொள்ளவேண்டும். தென்னிந்திய நடிகர் சங்கம் தனது கடும் கண்டனத்தை தெரிவிப்பதுடன் சட்ட ரீதியான அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்கும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறது.

அதிமுக நிர்வாகி மன்னிப்பு
ராஜூ அளித்த பேட்டி : ‛‛நடிகை த்ரிஷா குறித்து திரித்து வெளியிடப்பட்டுள்ளது. இதை, நடிகர் சேரன் உள்ளிட்ட திரைத்துறையினர் புரிந்து கொள்ள வேண்டும். நான், த்ரிஷா குறித்து பேச, அவ்வளவு பெரிய ஆள் இல்லை. த்ரிஷாவை நான் சொல்லவில்லை. த்ரிஷா உள்ளிட்ட சினிமா துறையினரிடம் மன்னிப்பு கோருகிறேன்'' என்றார்.

கண்டிக்காத முன்னணி நடிகர்கள்
நடிகை த்ரிஷா தமிழ் சினிமாவில் 20 ஆண்டுகளை கடந்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். ரஜினி, கமல், விஜய், அஜித், சூர்யா, விக்ரம், தனுஷ், சிம்பு, ஜெயம் ரவி, ஆர்யா என பெரும்பாலான முன்னணி நடிகர்ளுடன் இணைந்து நடித்துவிட்டார். ஆனால் இவர்கள் யாரும் த்ரிஷாவுக்கு ஆதரவாகவோ அல்லது அந்த அதிமுக., நிர்வாகிக்கு எதிராகவோ கண்டனம் தெரிவிக்கவில்லை.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.