மம்முட்டி படத்தின் இறுதிக்கட்டத்தில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்த கண்ணூர் ஸ்குவாட் இயக்குனர்

மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான பிரம்மயுகம் திரைப்படம் அதன் வித்தியாசமான மேக்கிங் மற்றும் புதுவிதமான கதை சொல்லல் முயற்சிக்காக மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் உருவாகி வரும் டர்போ மற்றும் பஷூக்கா ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் விதமாக தயாராகி வருகின்றன. இதில் புலிமுருகன் இயக்குனர் வைசாக் இயக்கத்தில் மம்முட்டி நடித்து வரும் டர்போ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக மம்முட்டி நடித்து வரும் பஷூக்கா படத்தில் மம்முட்டி சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் படமாக்கி முடிக்கப்பட்டு விட்டன. தற்போது நடைபெற்று வரும் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இயக்குனர் கவுதம் மேனன் சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் இந்த படத்தின் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய நிமிஷ் ரவி என்பவர் வேறு ஒரு படத்திற்காக பணியாற்ற சென்று விட்டார்.

இந்தநிலையில் இந்த இறுதி கட்ட படப்பிடிப்பில் புதிய ஒளிப்பதிவாளராக இணைந்து பணியாற்றி வருகிறார் மம்முட்டி நடித்த கண்ணூர் ஸ்குவாட் என்கிற வெற்றி படத்தை இயக்கிய இயக்குனர் ரோபி வர்கீஸ் ராஜ். இவர் திரையுலகில் ஒளிப்பதிவாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான். ஆனால் தற்போது இயக்குனராக மாறிவிட்ட நிலையிலும் மம்முட்டியின் மீது கொண்ட அபிமானத்தால் மீண்டும் கேமராவை தனது தோளில் தூக்கி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.